திரையுலகில் கால் பதிப்பதற்கு முன்னர் தனது வாழ்க்கையில் பல்வேறு இடர்ப்பாடுகளைச் சந்தித்தாராம் ரகுல் பிரீத் சிங். சில தருணங்களில் பட்டினி கிடந்து வாடியதாகவும் கூறி தன் ரசிகர்களை வருத்தத்தில் மூழ்கடித்துள்ளார். எனினும், கடந்த காலத்தில் பெற்ற சவாலான, சோதனையான அனுபவங்களே இப்போது திரையுலகில் பிரகாசிக்க தனக்குக் கைகொடுத்து இருப்பதாகவும் சொல்கிறார். "இந்த சிறு வயதிலேயே வாழ்க்கையில் அனைத்துவித சூழ்நிலைகளையும் கடந்து வந்திருக்கிறேன். அந்த அனுபவங்கள் இப்போது எனது திரை வாழ்க்கையில் வெற்றிநடை போட கைகொடுக்கிறது.
பசி, தூக்கமின்மை என்று அனைத்து சவால்களையும் என்னால் எதிர்கொள்ள முடிகிறது. "என்ன பிரச்சினை வந்தாலும் பொறுமையாக அதை எதிர்கொள்கிறேன். சில சமயங்களில் பொட்டல் காடு, கிராமங்களில் படப்பிடிப்பு நடக்கும். அங்கு தங்குவதற்கு நம் வசதிக்கேற்றாற்போல் இடம் கிடைக்காது. இதற்காக நான் கவலைப்படுவதில்லை. சிறு இடம் கிடைத்தாலே போதும், சமாளித்துக்கொள்வேன்," என்கிறார் ரகுல். உணவைப் பொறுத்தவரையிலும் கூட வாய்க்கு ருசியாக எதையும் எதிர்பார்க்க மாட்டாராம். பசிக்கும் நேரத்தில் என்ன கிடைத்தாலும் சாப்பிட்டு விடுவாராம். இதனால்தான் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் தன்னைப் பாராட்டுவதாகச் சொல்கிறார்.