அதிரடி நாயகன் எனத் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் நடிகர்கள் இனி கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில், பல கதாநாயகிகளும் அடிதடிப் படங்களில் அதிரடி காட்டத் துவங்கியுள்ளனர்.
அது மட்டுமல்ல, அதிரடி நாயகர்கள் அத்தனை பேரும் இனி பொய்யாக அடித்து, பொய்யாக நடிக்க முடியாது. உழைக்கணும்… உப்பு தண்ணி வழிய வழிய உழைக்க வேண்டும்...” என்கிறார் மூத்த செய்தியாளர் ஆர்.எஸ். அந்தணன்.
‘அதோ அந்த பறவை போல’ படத்தில் ‘சிக்ஸ்பேக்’ வைத்துக்கொள்ளாத குறையாக அசத்தியுள்ளார் அமலா பால். இந்தப் படம் அவரது நடிப்புக்காகவே வசூலை அள்ளும் என்கிறார்கள். அதேபோல் உடற்பயிற்சிக் கூடத்தில் வியர்த்து வழியும் சமந்தா, குத்துச் சண்டை ரித்திகா சிங், பளு தூக்கும் ரம்யா என்று நடிகைகளின் ஆக்ரோஷ காணொளிகள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வெளியாகின்றன எனச் சுட்டிக்காட்டுகிறார் அந்தணன்.
தமிழில் மிகவும் பிரபலமான நடிகைகளாக இருக்கும் சினேகா, அமலாபால், சமந்தா வரிசையில் தற்போது விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் மாளவிகா மோகனனும் இணைந்திருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனனும் வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள்.
கதைப்படி விஜய்யும் விஜய் சேதுபதியும் மோதிக்கொள்ளும் அடிதடிக் காட்சி பிரம்மாண்டமாக படமாக்கப்படுகிறது. இதில் மாளவிகா மோகனனுக்கும் ஒரு சண்டைக் காட்சி உள்ளதாம். அதற்காக தற்காப்புக் கலை பயிற்சி எடுத்து வருகிறார்.
‘பற்களர்’ என்ற தற்காப்புக் கலையை மையமாக வைத்து அவர் நடிக்கும் சண்டைக் காட்சி அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல். இதே போல் நடிகை ஆண்ட்ரியாவுக்கும் இப்படத்தில் சில சண்டைக் காட்சிகள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.
அப்படியே சமூக வலைத்தளங்களில் ‘மாஸ்டர்’ குறித்து உலா வரும் தகவல்களையும் பார்த்துவிடுவோம். இதில் கதைப்படி விஜய் பேராசிரியராக நடிக்கிறார் என்பது ஏற்கெனவே கசிந்த தகவல்தான். ஆனால் இடைவேளைக்கு முன்பு வரைதான் அவர் மிக சாதுவான பேராசிரியராக இருப்பாராம்.
அதன் பிறகு அதிரடி காட்டுவாராம். மாளவிகா மோகனன் விஜய் சேதுபதியுடன் மோதுவார் எனத் தகவல். கதைப்படி மாளவிகா மோகனன் கல்லூரி மாணவியாம்.
“மாணவி வேடம் என்பதால் சற்றே அதிகப்படியாக உடற்பயிற்சி செய்து, உடல் ்இளைத்து அச்சு அசலாக கல்லூரி மாணவி போன்றே மாறிவிட்டாராம். அந்த வகையில் இயக்குநரின் பாராட்டுகளைப் பெற்றார்,” எனப் படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.
கோடம்பாக்கத்தில் உருவான அண்மைய படங்களின் மூலம், அடிமுறை, கிராமகா, பற்களர் எனப் பலவிதமான தற்காப்புக் கலைகள் குறித்த விவரங்கள் தெரிய வந்துள்ளன.
“என்னதான் பயிற்சியாளர் விலாவாரியாகச் சொல்லிக் கொடுத்தாலும், அதை உடனுக்குடன் புரிந்து கொண்டு கச்சிதமாக சண்டையிடுவதற்கு தனி துணிச்சல் வேண்டும். அமலாபாலுக்கு அப்படியொரு துணிச்சல் இருந்தது,” என்கிறார் ‘அதோ அந்த பறவை போல’ இயக்குநர் கே.ஆர்.வினோத்.
இதையேதான் நாயகி களுக்கும் கதையில் முக்கியத்துவம் தரும் மற்ற இயக்குநர்களும் சொல்கிறார்கள். இதற்கிடையே நடிகைகள் திரிஷா, காஜல் அகர்வாலும் கூட அதிரடிப் படங்களில் நடித்து வருவதாகத் தகவல்.
“தமிழ் சினிமா தற்போது ஆரோக்கியமான பாதையை நோக்கித் திரும்பியுள்ளதாக கோடம்பாக்க விவரப் புள்ளிகள் கூறுகின்றனர்.