கதிர்வேலு இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘ராஜவம்சம்’. இவர் இயக்குநர் சுந்தர்.சியின் உதவியாளராகப் பணியாற்றியவர்.
குருவைப் போலவே நகைச்சுவையுடன் கூடிய குடும்பச் சித்திரத்தை உருவாக்கி வருகிறார். படப்பிடிப்பு முடிந்த நிலையில், தொழில்நுட்பப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
46 நட்சத்திரங்களைக் கொண்ட கூட்டுக்குடும்பம், விவசாயத்தில் விளையாடும் தொழில்நுட்பம் என்று தன் முதல் படத்திலேயே அதிரடியாக களமிறங்கி உள்ளார் கதிர்வேலு.
“இவ்வளவுப் பேரையும் எப்படி ஒருங்கிணைத்தீர்கள் என்று பலரும் ஆர்வத்துடன் கேட்கின்றனர். நான் பாடம் கற்றுக்கொண்ட பள்ளிக்கூடம் அப்படி.
“சுந்தர்.சி இயக்கிய எல்லாப் படங்களிலும் மிகப் பெரிய நட்சத்திரக்கூட்டம் இருக்கும். அவரிடம் ஏழு வருடங்கள் பணியாற்றிய அனுபவம்தான், நட்சத்திரங்களை எப்படிக் கையாள்வது? யாரிடம் எப்படி நடந்துகொள்வது? என்று எனக்கு கற்றுக்கொடுத்தது.
“அனைத்து நட்சத்திரங்களும் எனக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்கள் என்பதால் இந்தக் கதையை துணிச்சலுடன் இயக்க ஆரம்பித்தேன். துவக்கத்தில் கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. ஆனால் ஒருங்கிணைத்தபிறகு எல்லோரும் ஒரே குடும்பமாக மாறி, ஒவ்வொருவரும் இதை தங்கள் சொந்தப் படமாக நினைத்து உழைத்தனர்,” என்கிறார் கதிர்வேலு. சசிகுமார் தான் படத்தின் நாயகன் என்றதுமே பலர் கதை கேட்காமலேயே நடிக்க ஒப்புக்கொண்டனராம். சசிகுமார் சராசரி தமிழனை சினிமாவில் பிரதிபலிக்கும் நட்சத்திரம் என்பது கதிர்வேலின் கருத்து.
“மற்ற படங்களில் சசிகுமாருக்கு என்று ஒரு குடும்பம் இருக்கும். இதில் அவருக்கு கூட்டுக்குடும்பம் இருக்கிறது. அப்பா, அம்மா மற்றும் ஐந்து அண்ணன்கள், ஐந்து அண்ணிகள், ஏழு தாய்மாமன்கள் மற்றும் அவர்களுடைய வாரிசுகள் என்று மொத்தம் இருபத்தேழு பேர் கொண்ட மிகப் பெரிய குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளை அவர்.
“முந்தைய படங்களில் பெரும்பாலும் அவர் கிராமத்தில் வாழ்பவராக இருந்தார். இதில் தகவல் தொழில்நுட்ப நிறுவன அதிகாரியாக வருகிறார். சண்டைக் காட்சிகளில் முரட்டுத்தனம் இருக்காது. சசிகுமாரின் சக ஊழியராகப் பணியாற்றும் நிக்கி கல்ராணி திடீரென அவரைக் காதலிப்பார். அவர்களுடைய திருமணம் கிராமத்தில் நடக்கும்.
“நகரத்தைச் சேர்ந்த பெண்ணான அவர், கிராமத்து சம்பிரதாயங்களை எப்படி ஏற்றுக்கொள்கிறார்? முடியாத நிலையில் சசிகுமார் எப்படி அவரை ஏற்றுக்கொள்ள வைக்கிறார் என்பது கதை. இதில் டூயட் கிடையாது. முத்தக்காட்சி கிடையாது. கட்டிப்புடி வைத்தியம் கிடையாது. ‘ஐ லவ் யூ’ என்றுகூட சொல்லமாட்டார். ஆனால், இந்தக் காதல் மிகவும் இயல்பாக இருக்கும்,” என்கிறார் கதிர்வேலு. அருகிவரும் கூட்டுக் குடும்பமுறையின் அவசியத்தை இப்படம் வலியுறுத்தும். தற்போது நாம் இழந்து கொண்டு இருக்கும் அற்புதம் இது. தனித்துவிடப்பட்ட மனிதர்களாலும் கட்டுப்பாடற்ற சுதந்திரத்தாலும்தான் குற்றங்களும் மனநோயாளிகளும் தற்கொலைகளும் பெருகி வருகிறது,” என்கிறாா் கதிர்வேலு.