‘ஆடிய கால்களும் பாடிய வாயும் சும்மா இருக்காது’ என்பதாக இருக்கிறது திரிஷாவின் கதை. இதோ மீண்டும் இன்ஸ்டகிராம் தளத்தில் செயல்படத் தொடங்கிவிட்டார்.
கவர்ச்சிகரமான கருப்பு ஆடை அணிந்து, தேகமெல்லாம் நீர்த்துளிகள் ஒட்டிக்கொண்டிருக்கும் தனது படத்தை திரிஷா வெளியிட ரசிகர்கள் சிலிர்த்துப் போயிருக்கிறார்கள்.
“சமூக வலைத்தளங்கள் என்பன ஒருவித போதை. அதிலிருந்து தற்காலிகமாக விலகவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சிறிது ஓய்வு தேவை. மீண்டும் தகுந்த நேரத்தில் சமூக வலைத்தளங்களில் இயங்கத் தொடங்குவேன்,” என்று சில வாரங்களுக்கு முன்புதான் அறிவித்திருந்தார் திரிஷா.
அவர் சொன்ன காலம் இவ்வளவு சீக்கிரம் வரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை. இவரது வருகையை நடிகையும் நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ரம்யா, கன்னட நடிகை நயனா உள்ளிட்டோர் உடனுக்குடன் வரவேற்றுள்ளனர்.
ரசிகர்களும் பலவிதமாக தங்கள் அன்பை வெளிப்படுத்த, அதைக்கண்டு திரிஷா நெகிழ்ந்து போயிருந்த வேளையில் ‘பிக்பாஸ்’ புகழ் நடிகை மீரா மிதுன் ஒரு சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளார்.
அதாவது திரிஷா தன்னை எல்லா வகையிலும் காப்பியடிக்கிறார் என்பதுதான் மீராவின் குற்றச்சாட்டு.
இதுதொடர்பாக அவர் தமது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“எனது சிகையலங்காரம், ஒப்பனை செய்யும் விதம், கவர்ச்சி பாணி என எல்லாவற்றையும் திரிஷா தொடர்ந்து பின்பற்றி வருகிறார். இதுதான் அவருக்கு நான் விடுக்கும் கடைசி எச்சரிக்கை. மீண்டும் ஒருமுறை என்னைப்போல் காட்சியளிக்க வேண்டும் என அவர் முயற்சி செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்,” என்பதே மீரா மிதுன் விடுத்துள்ள எச்சரிக்கை.
திரிஷா கணினி உதவியோடு தனது புகைப்படங்களில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் தன்னைப்போல் காட்சியளிப்பதாக மீரா சொல்கிறார். தொடர்ந்து தனது பாணியை திரிஷா பின்பற்றுவதுதான் இவருக்குக் கோபத்தை ஏற்படுத்துகிறதாம்.
“நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பது உங்கள் மனசாட்சிக்குத் தெரியும். எனவே, மாறுங்கள்,” என்று மீரா மிதுன் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ரசிகர்கள் அவருக்கு எதிராக கொந்தளித்துள்ளனர். கடந்த இருபது ஆண்டுகளாக தமிழ்ச் சினிமாவில் அசத்திக் கொண்டிருக்கும், தனி நாயகியாக நடித்துவரும் திரிஷாவை நேற்று வந்த மீரா மிதுன் விமர்சிப்பதை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது என்று பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக திரிஷா தரப்பில் இருந்து எந்த பதிலடியும் இதுவரை வரவில்லை. எனினும் திரிஷா இதையெல்லாம் கண்டுகொள்வதாக இல்லையாம். பதிலுக்குப் பதில் பேசுவதால் தமக்கு எந்த வகையிலும் லாபம் இல்லை என்பதுடன், தாம் விளக்கம் அளித்தால் அது மீராவுக்குத்தான் இலவச விளம்பரமாக அமையும் என்றும் கருதுகிறாராம் திரிஷா.
இதற்கிடையே, திரிஷாவை அடுத்து இளம் நாயகி ராஷி கண்ணாவுக்கும் ஒரு நடிகை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் ராம்கோபால் வர்மாவின் ‘மேக் டு’ படத்தில் நடித்த ஸ்வீட்டி.
கதாநாயகியாக நடிப்பதற்கு முன்பு சில படங்களில் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றி உள்ளார். இந்நிலையில் ‘சுப்ரீம்’ என்ற படத்தில் பணியாற்றியபோது அதிகாலை 3 மணிக்கு பணிக்கு வருமாறு படக்குழு அழைத்ததாம்.
“அந்தப் படத்தில் ராஷிதான் நாயகி. அவருக்குப் புடவை கட்டிவிட வேண்டும் என்று சொல்லி உடனே வருமாறு கேட்டுக் கொண்டனர். நீண்டதூரம் பயணம் செய்து படப்பிடிப்பு தளத்தை அடைந்தபோது பல மணி நேரம் காக்க வைத்தார் ராஷி.
“அவர் பலமுறை என்னை இவ்வாறு காக்க வைத்து எனது சுயமரியாதையைச் சீண்டிப் பார்த்துள்ளார். இத்தகைய போக்கு மாறவேண்டும்,” என்று கொந்தளித்துள்ளார் ஸ்வீட்டி.
அவரது இந்தக் குற்றச்சாட்டை ராஷி தரப்பு திட்டவட்டமாக மறுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. திரையுலகைச் சேர்ந்த அனைவருக்கும் தாம் மரியாதை அளித்து, அன்பு பாராட்டி வருவதாக ராஷி கண்ணா கூறுகிறாராம். அவரது ரசிகர்கள் பலர் ஸ்வீட்டியை சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.