ஜி.வி பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் 'வணக்கம்டா மாப்ள' படம் திரையரங்க வெளியீட்டீற்காக காத்திருக்காமல் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகிறது.
தமிழகத்தின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் 'டிக்டாக்' செயலி மூலம் அவ்வப்போது சில காணொளிகளை வெளியிடுவாராம். அவர் அடிக்கடி சொல்லும் 'வணக்கம்டா மாப்ள' என்பது அவ்வட்டாரத்தில் ரொம்ப பிரபலம். அதையே தலைப்பாகத் தேர்ந்தெடுத்ததாகச் சொல்கிறார் படத்தின் இயக்குநர் ராஜேஷ்.
"இரு நண்பர்களுக்கு இடையே நடக்கும் கதை இது. இருவருமே காதல் வலையில் விழுகிறார்கள். இருவரும் காதலிக்கும் பெண்களைக் கைப்பிடித்தனரா என்பதைக் கலகலப்பாகச் சொல்லியிருக்கிறோம்.
"ஜி.வி. பிரகாஷின் பெற்றோராக ஜெயபிரகாஷ், பிரகதி நடித்துள்ளனர். 'பிகில்' படம் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த அமிர்தா ஐயர் நாயகியாக நடித்துள்ளார்.
"அவரது நடிப்பு நன்கு மெருகேறி உள்ளது. தமிழில் நிச்சயம் ஒரு வெற்றி வலம் வருவார்.
"ஏற்கெனவே தெலுங்கு ரசிகர்கள் இவரை பெரிதும் பாராட்டி வருகின்றனர். மிக விரைவில் தமிழ் ரசிகர்கள் மனதிலும் நல்லதொரு இடம் பிடிப்பார்.
"மேலும் ஆனந்தராஜ், எம்.எஸ். பாஸ்கர், டேனியல் என்று பெரிய நகைச்சுவைப் பட்டாளத்தையே களமிறக்கி உள்ளோம்," என்கிறார் இயக்குநர் ராஜேஷ்.
வழக்கமாக இவரது படங்களின் இறுதிக் காட்சியில் ஜீவா, ஆர்யா விஷால் என யாரேனும் முன்னணி நாயகன் திடீரென தோன்றுவார். மேலும் அந்த நாயகர்கள் நகைச்சுவையாக வசனங்களைப் பேசி, ரசிகர்களை மகிழ்வித்து படத்தை நல்லவிதமாக முடித்து வைப்பார்கள்.
அதேபோன்ற காட்சிகள் இந்தப் புதுப்படத்திலும் உள்ளனவாம். நாயகனாக நடிப்பதுடன் இப்படத்துக்கு இசையமைக்கும் பணியையும் ஏற்றுள்ளார் ஜி.வி. 'அசுரன்', சூரரைப் போற்று' என கடந்த ஆண்டு இசையமைப்பில் அசத்தியவர், இந்தப் படத்துக்காகவும் நான்கு அருமையான பாடல்களை வழங்கியுள்ளாராம்.
"ஊரடங்கின்போது நிறைய ஓய்வு கிடைத்தது. அதனால் எனது குழுவினர் இல்லாமல் நான் மட்டுமே தனியாக அமர்ந்து சில கதைகளை உருவாக்கினேன்.
"குடும்பத்துடன் கண்டு ரசிக்கும்படி ஒரு படத்தை எடுக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
"கதையை முடித்து சில மாதங்களுக்குப் பிறகு தயாரிப்புத் தரப்பை சந்தித்துக் கதை சொன்னபோது மிக நன்றாக இருப்பதாக தெரிவித்தனர். எனவே தமிழ்ப் புத்தாண்டன்று வெளியிடலாம் என்று முடிவு செய்து கடந்த டிசம்பர் மாதம் படப்பிடிப்பைத் துவங்கினோம்.
"அனைத்தையும் திட்டமிட்டபடி செய்ய முடிந்ததால் குறித்த நேரத்தில் படம் வெளியாகிறது," என்கிறார் எம். ராஜேஷ்.
பண்டிகை சமயத்தில், நேரடியாகத் தொலைக்காட்சியில் வெளியீடு காண்பதால் பெரும்பாலான சினிமா ரசிகர்களை இப்படம் சென்றடையும் என படக்குழுத் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் ஜி.வி. பிரகாசின் பங்களிப்பு மிக முக்கியமானது என்று குறிப்பிடுபவர், அவரைப். போன்று பல்வேறு திறமைகள் கொண்ட இளையர்கள் திரைத்துறைக்கு பெரும் பலமாக உள்ளனர் என்கிறார்.
"அனுபவ இயக்குநர்களின் படங்களில் நடித்த பிறகு ஜிவி.பிரகாஷ் ஒரு நடிகராக நன்கு பக்குவப்பட்டுள்ளார். அவரிடம் பெரும் முன்னேற்றம் காணப்படுகிறது.
"'கடவுள் இருக்கான் குமாரு' படத்துக்குப் பிறகு இருவரும் இணைந்துள்ளோம். அப்போது நான் பார்த்த ஜி.வி.க்கும் இப்போது பார்க்கும் ஜி.வி.க்கும் இடையில் பல நல்ல மாற்றங்கள் தென்படுகின்றன.
"அனைத்து வசனங்களையும் அழகாக மனப்பாடம் செய்து பக்குவமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். ஒரே 'டேக்'கில் அவர் காட்சிகளை முடிப்பதைக் கண்டு நானே அசந்து போனேன்.
"இப்போதுள்ள கவலைக்குரிய கொரோனா சூழ்நிலையில் இந்தப் படம் அதை எல்லாம் மறந்து ரசிகர்களை மனம்விட்டுச் சிரிக்கவைக்கும். அவர்களுடைய மனதை லேசாக்கும் என்பது மட்டும் உறுதி," என்று உத்தரவாதம் தருகிறார் இயக்குநர் எம். ராஜேஷ்.
, :
அமிர்தா