தமது நடிப்பில் ரஜினியின் சாயல் இருக்கும் என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
கௌதம் கார்த்திக் நாயகனாக நடித்துள்ள ‘1947 ஆகஸ்ட் 16’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார்.
“எனக்கு நடிகர் கார்த்திக்கை மிகவும் பிடிக்கும். அவர் மிகவும் இனிமையானவர். கௌதம் கார்த்திக்கைச் சந்தித்த பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் கார்த்திக் சாரை சந்தித்தேன்.
“அவர் மிக அழகான நடிகர். அதைவிட பிடித்தமான விஷயங்கள் அவரிடம் உள்ளன. கார்த்திக்கிடம் எந்தவொரு நடிகரின் சாயலும் இருக்காது.
“மற்ற நடிகர்களின் நடிப்பைப் பார்க்கும்போது வேறு யாரேனும் ஒருவரது சாயல் தென்படும். உதாரணமாக, எனது நடிப்பில் ரஜினியின் சாயலைக் காண முடியும்,” என்றார் சிவகார்த்திகேயன்.
தாம் ரஜினியின் தீவிர ரசிகன் எனப் பல மேடைகளிலும் பேட்டிகளிலும் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளார் சிவா.
இந்நிலையில், முதன்முறையாக தனது நடிப்பில் நடிகர் ரஜினியின் சாயல் தென்படும் என்று அவர் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
இயக்குநர் சங்கரின் 15வது படத்துக்கு ‘கேம் சேஞ்சர்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது. ‘இந்தியன் 2’ சங்கரின் 14வது படமாக உருவாகிறது. இந்நிலையில் தெலுங்கு முன்னணி நாயகன் ராம்சரணை வைத்து தனது 15வது படத்தை இயக்கி வருகிறார் சங்கர். தெலுங்கில் உருவாகும் இப்படத்தை தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிட உள்ளனர். இதில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். அஞ்சலி, சமுத்திரக்கனி, ஸ்ரீகாந்த், சுனில் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அதிக பொருட்செலவில் தயாராகிறது. பட வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.