அரசியல் கட்சியினர் வாக்குக்குப் பணம் வழங்கினால் வறுமை, சூழ்நிலை கருதி அதனை வாங்கிக் கொள்ளலாம் என்று இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சிக்கும் இதர கட்சிகளுக்கும் எனது ஆதரவு உண்டு என்ற விஜய் ஆண்டனி, “வாக்குக்கு பணம் வழங்கினால் வாங்கிக்கொள்ளலாம். ஆனால், பணம் பெற்றுக்கொண்டதால் அந்தக் கட்சிக்குத் தான் வாக்களிக்க வேண்டும் என்பதில்லை. புத்திசாலித்தனமாக முடிவெடுத்து நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்,” என்றார்.
விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘ரோமியோ’ திரைப்படம் நோன்புப் பெருநாளை ஒட்டி (ஏப்ரல் 11) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கோவையில் இப்படத்தை பிரபலப்படுத்தும் நிகழ்வில் விஜய் ஆண்டனி பேசியபோது, “ரோமியோ’ அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் படமாக உருவாகி உள்ளது.
“பெண்கள் என்றுமே ஆண்களுக்கு மேலானவர்கள். ஆண்கள் தோல்வி அடையும்போதெல்லாம் அவர்களை ஒரு தாயாக, மனைவியாக தேற்றுவதில் பெண்கள் கெட்டிக்காரர்கள்,” எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.