தொழில் தொடங்குபவர்கள் மேம்படுவதற்கு அவர்களுக்கிடையே திறன்களைப் பகிர்ந்துகொள்வது முக்கியம். புதிதாகத் தொடங்கப்பட்ட தொழில்களை மையப்படுத்தி, இந்திய தொழில்முனைவர்களிடையே தொழில்முனைப்பையும் நட்புறவையும் வளர்ப்பதற்கான நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி நடத்தப்பட்டது.
இயூ டீ இந்தியர் நற்பணிச் செயற்குழுவும் நற்பணி அமைப்பின் இளையர் பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில் சுமார் 70 பேர் பங்கேற்றனர்.
தொழில்நுட்பம், சமூக தொழில் நிறுவனங்கள், இணைய வர்த்தகம், உணவுத் துறை, நவீன நாகரிகம், கலை ஆகிய தலைப்புகளை ஒட்டி கருத்துகள் பகிரப்பட்டன.
‘டேய்.காம்.எஸ்ஜி’, ‘சஸ்டேனபல் லிவிங் லாப்’, ‘பொட்டுக்கார மாமி’, ‘கென்வின் அக்கௌண்டிங் அண்ட் ஐடி சர்வீசஸ்’, ‘ரிப்ரா ஏவியேஷன் பார்ட்னர்ஸ்’ ஆகியவற்றைச் சேர்ந்த தொழில்முனைவர்களும் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
‘சஸ்டேனபல் லிவிங் லாப்’ நிறுவனரும் இயக்குநருமான 34 வயது திரு வீரப்பன் சுவாமிநாதன் சமூகம், சுற்றுச்சூழல் குறித்துப் பேசினார். சமூகத்திற்குப் பயனளிக்கும் இலக்குகள், அதை அடைவதற்கான தொழில், கையாளவேண்டிய வழிமுறைகள் ஆகியன பற்றிப் பேசிய அவர், “மற்ற தொழில்கள் கையாளும் உத்திகளைப் பற்றி அறிந்து கொண்டேன். மின்னிலக்க உத்திகள் என்னை ஈர்த்தன,” என்றார்.
வளரும் தொழில்முனைவர்கள் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள தளத்தை உருவாக்கும் நோக்கத்தில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது என்றார் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் பூ.கணேஷ்,27. தொழில் தொடங்கும் இளையர்களுக்கு தொடக்கத்தில் அதிக ஆதரவு தேவை. தொடர்புகளை வளர்த்துக்கொள்ள இத்தகைய நிகழ்வுகள் உதவுகின்றன,” என்றார் அவர்.