லிட்டில் இந்தியா கடைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்ட வண்ணம் உள்ளனர்.
பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பொங்கல் திருநாளுக்கான முன்தயாரிப்புகள் இந்த வார இறுதியில் மிக மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
கேம்பல் லேனில் அமைந்துள்ள கடைகளில் பூக்கள், காய்கறிகள், கரும்பு, வாழையிலை, மண் சட்டி போன்ற பொருட்களை வாங்க மக்கள் திரளாக வருகின்றனர்.
அதிலும் வார இறுதி என்பதால் நேற்று பிற்பகல் நேரத்தில் கேம்பல் லேனின் இரு பக்கங்களிலும் உள்ள கடைகளில் மக்கள் அதிக அளவில் கூடினர்.
“திருமணமான பிறகு இது எனக்கு முதல் பொங்கல் என்பதால் நான் புகுந்த வீட்டாருடன் தடபுடலாக கொண்டாட திட்டமிட்டிருக்கிறேன். பொங்கல் அன்று விடுமுறை இல்லை என்றாலும் பொங்கல் திருநாளைக் குடும்பத்தினருடன் கொண்டாடுவதே எனக்கு முக்கியம்,” என்றார் 27 வயது திருமதி சாந்தி.
“மண்பானை, கரண்டி முதலிய பொங்கல் சமையலுக்குத் தேவையான பொருட்களை வாங்கவும் மக்கள் வந்துள்ளனர். பொங்கலை எளிமையாக கொண்டாட மக்கள் விரும்புகின்றனர். இதனால் சிறிய பானைகளையே விற்பனை செய்கிறோம். நாளைமுதல் கரும்பு விற்கத் தொடங்குவோம்,” என்றார் அனுஷியா பூக்கடை உரிமையாளர் திரு கிருஷன், 25.
சிலர் ஒன்றுமே வாங்காவிட்டாலும் கடைகளிலுள்ள பொங்கல் பொருட்களைப் பார்த்துவிட்டுச் செல்கின்றனர்.
“கோலம், வண்ணமயமான அலங்காரம், மாட்டுத்தொழுவம் ஆகியவற்றைக் காணும்போதே பொங்கல் உணர்வு ஏற்படுகிறது,” என்று 24 வயது கங்கா கூறினார்.
சீனாவிலிருந்து சிங்கப்பூருக்கு முதன்முறையாக தன் மனைவியுடன் வந்திருக்கும் 27 வயது சேம் செங்கின் முதல் பொங்கல் அனுபவம் லிட்டில் இந்தியாவில்தான்.
“இயற்கைக்கு நன்றி சொல்லும் இது போன்ற கொண்டாட்டங்கள் அருமையாக உள்ளன,” என்றார் அவர்.
நாளை பொங்கல் விற்பனை மேலும் மும்முரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே இந்திய மரபுடைமை நிலையத்தில் கோலமிடும் போட்டி, மண் பாண்டம் செய்தல், தஞ்சாவூர் ஓவியக் கலை செயல் விளக்கம், கதை சொல்லுதலும் கைவினையும் உள்ளிட்ட பல பாரம்பரிய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பொங்கலுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதுடன் இந்திய பாரம்பரிய உணர்வையும் பெறக் கைகொடுக்கிறது இவ்வாண்டின் ‘கம்பத்துப் பொங்கல்’.