நாளும் 1,000 பேருக்கு இலவசமாக சைவ உணவு வழங்கி வரும் ‘கிருஷ்ணாஸ் கிச்சன்’ உணவகம்், கிருமித்தொற்றுச் சூழலிலும் அச்சேவையைத் தொடர்ந்து வருகிறது. “வேலைக்குச் செல்லும் ஊழியர்கள் குறைந்துவிட்டதால் காலை உணவு சாப்பிட வருவோரும் குறைந்துவிட்டனர். இருந்தாலும் நண்பகலில் கூட்டம் முன்னைவிட இப்போது சற்று அதிகரித்துவிட்டது.
வேலையை இழந்தவர்கள், வருமானம் இல்லாதோர், குறைந்த வருமானம் ஈட்டுவோர் ஆகியோர் எங்கள் உணவகத்திற்கு அதிகமாக வருகிறார்கள்,” என்றார் வீராசாமி சாலையில் உள்ள அந்த உணவகத்தின் நிர்வாகி திரு ரகுபதி தாஸ், 55. இந்த காலக்கட்டத்தில் வேலைக்குச் செல்லாததால் வெளிநாட்டு ஊழியர்கள் பலரும் வந்து இலவச உணவு பெற்றுச் செல்வதாக திரு ரகு குறிப்பிட்டார். காலை, நண்பகல் என இரு வேளைகளில் இலவச உணவை இவ்வுணவகம் வழங்கி வருகிறது.