லிட்டில் இந்தியா வட்டார சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவுவதற்காக ஈராண்டுகளுக்குமுன் ஏற்படுத்தப்பட்ட ‘எஸ்எம்இ சென்டர்@லிட்டில் இந்தியா’, வர்த்தகங்கள் தற்போது கொவிட்-19 கிருமிப் பரவலைச் சமாளித்து நடைபோட கைகொடுத்து வருகிறது.
என்டர்பிரைஸ் சிங்கப்பூர், சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபை ஆகியவற்றுடனான பங்காளித்துவத்தின்வழி உருவாக்கப்பட்ட இவ்வமைப்பின் ஆலோசகர்கள், வர்த்தகர்களுடன் தொலைபேசி, ‘ஸூம்’ செயலி வழியாக அல்லது நேரடியாகச் சந்தித்து, கலந்துரையாடி தீர்வுகளைக் கண்டறிய முயன்று வருகின்றனர்.
“லிட்டில் இந்தியாவில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. சில கடைகள் செயல்படுவதற்கு அனுமதி இருந்தாலும் கடைக்காரர்கள் பலர் முன்னதாகவே இணையம் வழி வர்த்தகம் செய்வதற்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்யவில்லை. அவர்களுக்கென பிரத்தியேக வாடிக்கையாளர்கள் இருந்தபோதும் இந்தப் பிரச்சினையால் பொருட்கள் வாங்குவதும் விற்பதும் தடைபடுகின்றன,” என்றார் ‘எஸ்எம்இ சென்டர்’ அமைப்பின் பணித்திட்டத் தலைவர் திருவாட்டி காமேஷ்வரி ஜெயப்பிரகாஷ்.
இந்த அமைப்பிடமிருந்து ஆலோசனை பெற்ற நிறுவனங்களில் ஒன்று, மளிகை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை விற்கும் ரசூல் கடை.
நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்ட காலத்தில் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருந்தபோதும் வர்த்தகம் வெகுவாகக் குறைந்துவிட்டதாகக் கூறினார் ரசூல் கடையின் உரிமையாளர் திரு முகம்மது ஷா, 47.
‘எஸ்எம்இ சென்டர்’ அமைப்பின் ஆலோசகர்கள் அளித்த பரிந்துரையின்படி, இந்தக் கடை ‘Dei.com.sg’ விற்பனைத் தளத்துடன் இணைந்து முதன்முறையாக இணையவழி வர்த்தகத்திற்குள் அடியெடுத்து வைத்தது.
அதைத் தொடர்ந்து, தற்போது 70% விற்பனை இணையம் மூலம் நடைபெறுவதாக திரு முகம்மது ஷா தெரிவித்தார்.
“இணையவழி வர்த்தக முறையைத் தக்க நேரத்தில் பயன்படுத்த முடிந்ததால் பெரும் இழப்பை எங்களால் தவிர்க்க முடிந்தது. இதற்கு வாடிக்கையாளர்களும் நல்ல வரவேற்பு அளித்து வருகின்றனர்,” என்றார் அவர்.