இர்ஷாத் முஹம்மது
பிரியாணி விற்கும் நூற்றுக்கணக்கான கடைகள் சிங்கப்பூரில் இருந்தும் பலர் நினைவுக்கு வருவது இஸ்லாமிக் உணவகத்தின் பிரியாணிதான். தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தின் ஏனங்குடி ஊரிலிருந்து சிங்கப்பூருக்கு 1900ஆம் ஆண்டில் குடிபெயர்ந்த திரு அப்துல் ரஹிமான் என்பவரால் 1921ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது 'இஸ்லாமிக்' உணவகம். ஏப்ரல் 4ஆம் தேதி இந்த பழம்பெரும் உணவகம் அதன் நூறாண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
இதை முன்னிட்டு ஏப்ரல் 4ஆம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை எண் 735 நார்த் பிரிட்ஜ் சாலையில் உள்ள உணவகத்தில் இலவசமாகக் கோழி பிரியாணி வழங்கப்படும். மேலும், ஆறு மருத்துவமனைகள், ஆறு பலதுறை மருந்தகங்கள் ஆகியவற்றுக்குக் கோழி பிரியாணி பொட்டலங்களை இலவசமாக வழங்கி வருகின்றனர்.
"போர்க்காலத்தின்போது கம்போங் கிளாம் பகுதியில் இருந்தவர்களுக்கு என் தாத்தா உணவளித்து பசியாற்றி உள்ளார் என்று என் தந்தை சொல்ல கேட்டிருக்கிறேன். அவரது வழியிலேயே இந்த நூற்றாண்டுக் கொண்டாட்டத்தின்போது மக்களுடன் சேர்ந்து கொண்டாட முடிவெடுத்தோம்," என்றார் நிறுவனரின் பேரனும் மூன்றாம் தலைமுறை உரிமையாளருமான திரு கலீலுர் ரஹ்மான் அப்துல் வஹாப் (படம்), 59.
திரு கலீலின் தாத்தா பெரும் செல்வமும் செல்வாக்கும் மிகுந்த அல்சகோஃப் குடும்பத்தின் தலைமை சமையல்காரராக இருந்து பின்னர் தேங் ரோட்டில் வர்த்தகம் ஒன்றை நடத்தினார். 1921ஆம் ஆண்டில் நார்த் பிரிட்ஜ் சாலை கடைவீடு ஒன்றிலுள்ள மேசை அளவு பகுதியை வாடகைக்கு எடுத்து உணவு சமைத்து விற்றார்.
அவ்வாறு உதயமானதுதான் 'இஸ்லாமிக்'. வியாபாரம் பெருகியதன் விளைவாக நான்கு கடைவீடுகளை வாங்கினார் பத்து பிள்ளைகளுக்குத் தந்தையான திரு அப்துல் ரஹிமான். குடும்பச் சொத்துகளைப் பிரிப்பதற்காக கடைகளை விற்று, கலீலும் அவர் தந்தையின் சகோதரர்கள் பிள்ளைகளும் சேர்ந்து இரண்டு கடைவீடுகளை மீண்டும் வாங்கி வியாபாரத்தைத் தொடர்ந்தனர். 2008ஆம் ஆண்டு அவ்விரண்டையும் விற்று, எண் 745 நார்த் பிரிட்ஜ் சாலையில் கலீல் தொடர்ந்து உணவகத்தை நடத்தினார். சென்ற ஆண்டு எண் 735க்குக் கடை மாறியது.
கடந்த 30 ஆண்டுகளாகத் தொழில்நுட்பத்தைக் கொண்டு உணவகத்தின் செயல்பாடுகளை மாற்றி அமைப்பது குறித்து ஆராய்ந்தார் திரு கலீல். அவ்வாறு தாம் முன்னெடுத்த சில தொழில்நுட்ப மேம்பாடுகளால் இதர உணவகத்தார் சந்திக்கும் சவால்களை முன்பாகவே எதிர்கொண்டுவிட்டார் திரு கலீல்.
"நல்ல சமையல்காரர் வேண்டும் என்பர். என் கடையில் இயந்திர இயக்குநர் இருந்தாலே போதும் என்பேன்," என்ற கலீல், தம் உணவகச் சமையலை இயந்திரங்கள்தான் செய்கின்றன என்றார்.
அதிகாலையில் வீட்டில் இருந்தபடியே 'வைஃபை' மூலம் சமையலுக்குத் தேவையான முன்தயாரிப்பு வேலைகளைத் தொடங்கிவிடுவதாகத் தெரிவித்தார்.
"காலையில் ஏழு மணிக்கு ஊழியர்கள் வேலைக்கு வந்தால் போதும்," என்றார் அவர். இயந்திரங்களின் உதவியால் உணவின் சுவையும் கலவையும் சீராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
உணவின் ருசியே இந்தக் கடையின் தனித்துவம். அதற்குக் காரணம் அவர்களின் ரகசிய மசாலா கலவை. கலீலின் தாத்தா கைவண்ணத்தில் உருவான அந்தக் கலவையைத் தயாரிக்கும் நுட்பம், அந்தக் குடும்பத்தினருக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.
நூறு ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்துவந்துள்ள இந்த உணவகத்தை, வரும் ஆண்டுகளில் 'ஃப்ரேன்சைஸ்' முறையில் விரிவாக்கம் செய்யும் சாத்தியமும் ஆராய்ந்து வரப்படுகிறது. மேலும் தொழில்நுட்பத்தைக் கொண்டு உணவு உற்பத்தி செய்யும் முறையையும் ஆராயவிருப்பதாகக் கூறினார் திரு கலீல்.