தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக, தமிழவேள் நற்பணி மன்றம், 'நாளை நமதே' என்ற நிகழ்ச்சிக்கு ஏப்ரல் 25ஆம் தேதி அன்று ஏற்பாடு செய்தது. மன்றம் பல ஆண்டுகளாகத் தமிழ்மொழி சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
உற்சாகம், ஊக்கம், தன்னம்பிக்கை ஆகிய அம்சங்களுடன் இளையர்களையும் கவரும் விதமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. இளைஞர்கள் இன்றைய உலகில் துணிச்சல்மிக்க மனப்போக்கைக் கொண்டு சோதனைகளைச் சாதனைகளாக மாற்றலாம் என்பதை நிகழ்ச்சி அறிவுறுத்தியது.
நிகழ்ச்சி நெறியாளர் முதல் பேச்சாளர்கள் வரை இளையர்கள்தான். நிகழ்விற்குச் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினரான திரு முகமது இர்ஷாத் கலந்துகொண்டார்.
இன்றைய இளைஞர்களிடையே நிலவும் சிக்கல்கள், அவற்றைச் சமாளிக்கும் வழிகள் ஆகியவற்றைப் பற்றி சிறப்பு விருந்தினர் தம் உரையில் மிக எதார்த்தமாகப் பேசி இருந்தார்.
அதையடுத்து, குமாரி சர்மிலி செல்வராஜி, ஓர் இளையராகத் தனது வாழ்க்கை அனுபவங்களையும் தனக்குள் எழுந்த கேள்விகளையும் பகிர்ந்துகொண்டு தனது தன்முனைப்புப் பேச்சைத் தொடங்கினார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் நரம்பியல் துறையில் முனைவர் பட்டப்படிப்பை மேற்கொண்டு வரும் அவர், சமூக எதிர்ப்பார்ப்புகளுக்கும் அப்பாற்பட்ட ஒருவரது சொந்த மன நிம்மதி, மன அமைதி, இலட்சியக் கொள்கை, தொடர் முயற்சி, நிதானமான போக்கு போன்றவற்றின் முக்கியத்துவத்தைச் சுட்டினார்.
தமிழகத்திலிருந்து திரு சோழ. நாகராஜன் நிகழ்ச்சியில் இணைந்துகொண்டார். செம்மலர் இலக்கிய இதழின் இணை ஆசிரியரான அவர், 'அறிவியல் தமிழை அன்றே முன்மொழிந்தவர் கலைவாணர்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
உலக அரங்கில் தமிழ்மொழியின் அறிவியல் கூறுகளை எடுத்துக்கூற வேண்டும் என்ற அவர், அவ்வாறு எடுத்துரைக்க கலைவாணர் போன்ற கலைஞர்களைப் பற்றி இளைஞர்கள் அறிந்திருக்க வேண்டும் என்று அன்பு வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.
இரு பேச்சாளர்களின் சிறப்புரைகளுக்குப் பிறகு கருத்தாடல் அங்கம் ஒன்று நடைபெற்றது. ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து வயதினரையும் கவரும் அங்கமாக அது அமைந்தது.
தன்னம்பிக்கை, தன்முனைப்பு ஆகியவற்றுடன் இளையர்கள் தங்களுக்கான பாதையை வகுத்துக்கொள்ளும்போது தடைகள் நீங்கும் என்ற சிந்தனையைப் பிள்ளைகளிடம் நாம் விதைக்க வேண்டும் என்றார் மன்றத்தின் மூத்த ஆலோசகர் திரு இலியாஸ்.
செய்தி: கலைவாணி இளங்கோ