முதியவர்களுக்குச் சேவை புரிவதில் இன்பம் காணும் திருமதி சரோஜா தேவி, 58, ஸ்ரீ நாராயண மிஷனில் 23 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். ஜெசிந்தா சுரேஷ், 29 மற்றும் நட்டாஷா சுரேஷ், 26 ஆகிய இருவரும் இவரின் மகள்கள்.
இவர்களுடன் தம்முடைய வயதான தாயாரையும் திருவாட்டி சரோஜா கவனித்துக்கொள்கிறார். இவரின் பராமரிப்புப் பொறுப்புகள் அத்துடன் நின்றுவிடவில்லை.
குழந்தை ஒன்றை வளர்க்க உதவுமாறு சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு அவரை நாடியது. நல்லெண்ணத்துடன் 'சரி' என்ற திருமதி சரோஜா, எட்டு ஆண்டுகளாக அப்பிள்ளையைக் கவனித்துக்கொண்டு வருகிறார்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுடன் வளர்ப்பு பெற்றோராகத் தம்மை அதிகாரபூர்வமாக பதிவு செய்துகொள்ளாவிட்டாலும் குடும்பம், தங்க வீடு ஆகியவை ஒவ்வொரு குழந்தைக்கும் தேவை என்று அவர் நம்பியதால் இதைச் செய்ய முன்வந்தார்.
"அவன் எங்கள் குடும்பத்தில் ஒருவனாகிவிட்டான். வீட்டில் என் மகள்கள் அவனுக்கு அக்கறையுடன் பாடம் சொல்லித் தருவது, குடும்பத்துடன் ஒன்றாகச் சேர்ந்து உணவருந்துவது என நாங்கள் ஒற்றுமையாகச் செய்யும் அனைத்தும் எனக்கு மனநிறைவைத் தருகிறது," என்றார் திருவாட்டி தேவி.
திருவாட்டி தேவியின் கணவர் 2019ஆம் ஆண்டு மாரடைப்பால் காலமானார்.
பெரும் துக்கத்தில் ஆழ்ந்திருந்த நேரத்தில் தம்மை அணைத்தவாறு, "கவலைப்படாதீர்கள். நான் இருக்கிறேன். நான் உங்களைப் பார்த்துக்கொள்கிறேன்," என்று வளர்ப்பு மகன் கூறியது இன்றும் மறக்கமுடியாத ஒரு தருணம் என்றார் திருவாட்டி தேவி.
"என் வளர்ப்பு மகன், இரண்டு மகள்கள் மூவரையும் எனது வாழ்க்கையின் மிகப் பெரிய சொத்தாகக் கருதுகிறேன். வேலை முடிந்தவுடன் வீட்டை அடைந்து அவர்களிடம் பேசுவதற்கு உற்சாகத்துடன் இருப்பேன். எனது அன்பை முதியவர்களுக்கும் சேவை ஆற்றுவதன் வழி பகிர்ந்துகொள்கிறேன்," என்றார் அவர்.
தமக்கு 58 வயது என்ற நிலையில், எட்டு வயது சிறுவனைப் பார்த்துக்கொள்வது சோர்வு தருகிறதா என்று கேட்டதற்கு, "முதியவர்கள், சிறு பிள்ளைகள் யாவரையும் கவனித்துக்கொள்வது எனக்குப் பிடிக்கும். பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகும் நான்கு குழந்தைகளுக்காவது ஆதரவு தர விரும்புகிறேன்," என்றார் அவர்.
செய்தி: இந்து இளங்கோவன்