அம்மா என்பவர், பிள்ளைகளின் வாழ்க்கையில் பலதரப்பட்ட பாத்திரங்களை ஏற்பவர். பிள்ளைகள் வளர வளர அதற்கேற்ற சுதந்திரத்தையும் முடிவெடுக்கக்கூடிய அதிகாரத்தையும் அவர்களுக்கு வழங்குவதை அறிந்தவர் என்று நம்புகிறார் தன்முனைப்பு பேச்சாளர் திருமதி சரோஜினி பத்மநாதன்.
1970களில் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்குத் தம் அம்மா, சகோதர சகோதரிகளுடன் கப்பலில் வந்த அனுபவத்தை அவர் நினைவுகூர்ந்தபோது, “கப்பல் பயணத்தால் மயக்கம், வாந்தியால் அவதிப்பட்ட அம்மாவுக்கு நாங்கள் உணவு கொண்டு சென்றோம். கப்பல் செயின்ட் ஜான்ஸ் தீவில் நின்றது. எங்கள் பக்கத்தில் சிறு பிள்ளைகள் அமர்ந்திருந்தனர். அந்த பிள்ளைகளுக்குப் பசிக்கும் என்று கூறி உடனே தம் உணவில் கொஞ்சம் அப்பிள்ளைகளுக்குக் கொடுக்குமாறு கேட்டார்.
“நான் பொறுப்புணர்வுடன் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருவதற்குக் காரணமானவர் என் தாயார்தான்,” என்று தெரிவித்தார் திருமதி சரோஜினி.
திருமதி சரோஜினிக்குத் திருமணமாகி 30 ஆண்டுகள் ஆகின்றன. அவருக்கு உமா, பாமா, ஹேமா ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர்.
பெற்றோர்கள், தாய்மார்களுக்குப் பிள்ளைவளர்ப்புக்கான ஆலோசனை வழங்கும் இவர், மூன்று மகள்களை வளர்த்த அனுபவத்தில் நிறைய கற்றுக்கொண்டதாக தெரிவித்தார். பிள்ளைகள் பதின்ம வயதாக இருக்கும்பொழுது எங்கு தவறான பாதையில் சென்றுவிடுவார்களோ என்ற அச்சம், வளர்ந்த பின் வெளிநாடுகளுக்குப் படிக்கச் தம்மைவிட்டு செல்லும்போது ஏற்படும் பயம் இவையாவும் திருமதி சரோஜினி அனுபவித்த சவால்கள் ஆகும்.
தமது அனுபவத்தில், பிள்ளைகளுடன் நல்லுறவை வளர்த்துக்கொள்வது அவசியம் என்கிறார் அவர். அது பல நேரத்தில் கடினமான ஒன்றாக இருக்கும். ஆனால் அவர்களின் நம்பிக்கையைப் பெற்றுவிட்டால், பின்பு அவர்களே பெற்றோருடன் மனம்விட்டு பேசத் தொடங்குவர் என்பது அவரது கருத்து.
“தாய்மை ஓர் இனிமையான பயணம். ஒருவர் வெற்றியடையும்பொழுது அவ்வெற்றியைத் தொடர்வதற்கு வேறு யாரும் இல்லாமல் போனால் அது வெற்றி ஆகாது. நாம் சாதனைகள் பல புரிந்திருந்தாலும், நல்ல மனிதர்களாக வாழ்ந்திருந்தாலும், நம்முடைய பிள்ளைகளுக்கும் அதே பண்புகள், ஒழுக்கம் ஆகியவற்றை ஊட்டி வளர்ப்பது அவசியம்,” என்று சொன்னார் திருமதி சரோஜினி.
செய்தி: இந்து இளங்கோவன்