ஆர்த்தி சிவராஜன்
எல்லா காலங்களிலும் எல்லா சூழ்நிலைகளிலும் எல்லாருக்கும் பொருந்தும் பொது மறையான திருக்குறள் தங்கள் வாழ்வோடு எவ்வாறு பொருந்துகிறது என்பதை ஆராயவும் புரிந்து கொள்ளவும் சிங்கப்பூர் தமிழ் இளையர் களுக்கு அண்மையில் ஒரு வாய்ப்பு கிட்டியது.
சிற்பிகள் மன்றமும் அதிபதி நாடகக் குழுவும் இணைந்து தமிழ் மொழி விழாவை ஒட்டி "இளையர் குறள் (குரல்)" என்ற மின்னிலக்க நிகழ்வு அந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது.
தேர்வு செய்யப்பட்ட எட்டு குறள்களைக் கருப்பொருளாகக் கொண்டு, எட்டு குறும்படங்கள் உருவாக்கப்பட்டன. இளையர்கள் எழுதி இயக்க, இளையர்களே அவற்றில் நடித்துள்ளனர்.
வெவ்வேறு குறள்களும் இளையர்களுக்குக் கற்றுத் தரும் பாடம், நடைமுறை வாழ்விற்கு இவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை குறும்படங்கள் மிக எளிமையான முறையில் சித்திரிக்க முயன்றன.
அவற்றில் ஒன்று, உழைப்பும் விடாமுயற்சியும் நிச்சயம் பலன் அளிக்கும் என்பதைக் காட்ட முனைந்தது 'படிப்படியாக' என்ற குறும்படம். "தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்" என்ற குறளை அது அடிப்படையாகக் கொண்டிருந்தது.
சேர்ந்து உடற்பயிற்சி செய்யும் நண்பர்களில் ஒருவர் சோர்ந்து போகிறார். அவருக்கு ஆதரவாய் இருக்க பெருமுயற்சி செய்த நண்பருக்கு இதனால் பெரும் ஏமாற்றம். அதைக் கண்ட தோழி, பின்வரும் நாட்களில் உடற்பயிற்சியில் கடின உழைப்பை முதலீடு செய்கிறார். பலனும் அடைகிறார்.
குறும்படக் கதை ஒன்றை எழுதி அதில் நடித்ததோடு, மூன்று குறும்படங்களில் உதவி இயக்கு நராகவும் பணிபுரிந்தார் சம்பத் ஓவியா, 17.
"ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட திருக்குறளைத் தொடர்புபடுத்தி, இந்த 21-ஆம் நூற்றாண்டில் நம் வாழ்வில் நடக்கும் பிரச்சனைகளுக்கும் கூட நம்மால் தீர்வு காண முடிகிறது. இதை என்னால் கண்கூடாக அந்த காணொளிகளில் காண முடிந்தது."
"நண்பர்களுக்கு இடையில் நடக்கும் சண்டைகளில் இருந்து, அறிவியல் தொடர்பான சிக்கல்கள், ஏன் சமூக ஊடகங்களில் நாம் சந்திக்கும் பிரச்சினைகளைகூட திருக்குறளுடன் பொருத்திப் பார்த்து மாணவர்கள் கதைகளை எழுதியிருந்தனர்," என்றார் ஓவியா.
இக்குறும்படங்கள் பார்வையாளர்களுக்கு புதிய புரிதல்களைத் தந்தன. அவர்களில் ஒருவர் சாதனா ரமேஷ், 17.
"ஒவ்வொரு குறும்படமும், மிக குறைவான நேரத்தில் பல ஆழமான கருத்துக்களைக் கூறின. "உளைச்சல்" எனும் படத்தை நான் மிகவும் ரசித்தேன். எளிய உரையாடல், நேர்த்தியான காட்சி அமைப்பு, திறமையான நடிகர்கள் ஆகிய அம்சங்களைக் கொண்ட அந்தக் குறும்படம் மன உளைச்சல் உள்ளவர்களின் நிலையை சித்திரித்தது. உண்மையில் மனச்சுமையால் அவதிப்படுபவர்கள் பலர், அதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்த மாட்டார்கள் என்பதை உணர்ந்தேன். அதோடு, நண்பர்களின் ஆதரவு எவ்வளவு முக்கியம் என்பதும் புரிந்தது," என்ற சாதனா, வீட்டில் உள்ள திருக்குறள் நூல் களைப் படிக்கும் ஆர்வத்தை இந் நிகழ்வு தூண்டியதாகக் கூறினார்.
"இந்த இளையர் மின்னிலக்க நடவடிக்கையின் மூலம் இளையர்கள் பல்வேறு வாழ்க்கைப் பாடங்களை உணர்ந்துகொள்ளும்படி செய்வதே எங்கள் நோக்கம்," என்றார் இளையர் குறளின் ஏற்பாட்டளரும் சிற்பிகள் மன்றத்தின் தலைவருமான திருச்செல்வி.
"அத்துடன், மின்னிலக்க ஊடகம் வழியாக தமிழ் மொழியை மேம்படுத்தும் நோக்கில், பிற தமிழ் சமூக அமைப்புகளுடன் கூட்டாக செயல்பட்டு, இளையர்கள் அவர் களின் திறன்களை வளர்த்துக் கொள்ள ஒரு தளத்தை வழங்கினோம்," என்றார் அவர்.