வெளிநாட்டு பயணிகள் வந்து போகும் சாங்கி விமான நிலையத்தில் எவருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இருக்கக்கூடும் என்பதை உறுதியாகக் கூறமுடியாது.
ஆனால் அப்படி ஒருவருக்கு அத்தொற்று இருந்து அது மற்றவர்களுக்கு பரவாமல் இருக்கும் முயற்சியில் துப்பரவு மேலாளராக பணியாற்றும் திரு பெரேரா கிலிவ்டன் சன்ஜிவின் பங்கு இன்றியமையாதது.
கழிவறை, செக்-இன் கவுன்டர்கள், மின்தூக்கி, மின்படிக்கட்டு என சாங்கி விமான நிலையம் 'சோன் 2' பகுதி ஆகியவற்றின் சுகாதாரத்தை LS2 நிறுவனத்தின் திரு கிலிவ்டனும் அவரது குழுவினரும் நிலைநாட்டி வருகின்றனர்.
கொவிட்-19 பரவலுக்கு முன், ஒவ்வொரு மாறுநேர தவணையிலும் ஒருமுறை மேற்கொள்ளப்படும் சுத்திகரிப்புப் பணி இப்போது மூன்று முறை நடைபெறுவதாகக் கூறினார் திரு கிலிவ்டன், 42.
வேலைப்பளு அதிகரித்துவிட்டாலும் எதற்காக இதைச் செய்கி றோம் என்பதில் எல்லா துப்புரவு ஊழியர்களும் தெளிவாக உள்ளனர் என்று அவர் விளக்கினார்.
பெருந்தொற்றின் தொடக்கத்தில் வேலை இருக்குமா என்ற ஐயம் சக ஊழியர்களைப் போல் அவருக்கும் இருந்தது என்று கூறிய திரு கிலிவ்டன், சில மூத்த ஊழியர்கள் தங்களது நலன் கருதி வேலையிலிருந்து விலகவும் செய்தனர் என்றார்.
அண்மையில் உண்டான சாங்கி விமான நிலைய கிருமித்தொற்று குழுமம், சுய பாதுகாப்பில் இன்னும் தீவிர அக்கறை செலுத்தக் காரணம் ஆனது.
அதில் கையுறைகளையும் முகக்கவசங்களையும் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்றுவது, கைகளை அடிக்கடி கிருமிநாசினியுடன் சுத்தம் செய்வது ஆகியவை அடங்கும்.
அதிக அபாயம் இருக்ககூடிய இடங்களை சுத்தம் செய்தால் அதற்குரிய பாதுகாப்பு ஆடையை அணிந்து கிலிவ்டன் பணியை மேற்கொள்வார்.
இவரின் மனைவி திருமதி நாகம்மாள் செர்ட்டிஸ் பாதுகாவல் அதிகாரியாக சாங்கி விமான நிலையத்தில் பணியாற்றுகிறார்.
மாறுநேர வேலையில் ஈடுபடும் இருவரும் வீடு திரும்பியதும் முதல் வேலையாக குளித்துவிட்ட பிறகே உயர்நிலைப் பள்ளியில் பயிலும் அவர்களின் இரு மகள்களுடன் பொழுதைக் கழிப்பர்.
"நாட்டில் கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் முதல் அரண் சாங்கி விமான நிலையத்தில் உள்ளது. இங்கு சுகாதாரம் கட்டிக்காக்கப்படாவிட்டால் அனைவருக்கும் பாதிப்பு. எங்கள் பங்கை நாங்கள் செய்திட, பொதுமக்களும் தங்களது பங்கிற்கு பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்," என்றார் கிலிவ்டன்.
வாரஇறுதி நாட்களில் வெளியே சென்று குடும்பத்தினருடன் திரைப்படம் பார்ப்பது, காற்பந்து விளையாடுவது போன்ற நடவடிக்கைகளை ஒத்திவைத்துள்ளார் அவர். கூடிய விரைவில் அதற்கு விடிவுகாலம் பிறக்கும் என்பது அவரது நம்பிக்கை.