இந்து இளங்கோவன்
காலை வேளையில் தங்களது அம்மா, அப்பாவின் உதவியோடு வீட்டு வாசலில் பாரம்பரிய புள்ளி கோலம் போட்டு அழகு பார்த்தனர் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் 'தமிழோடு இணைவோம்: அழகே! தமிழே!' என்ற மெய்நிகர் நிகழ்ச்சியில் பங்கேற்ற தொடக்க நிலை 3 மற்றும் 4ஆம் வகுப்பில் பயிலும் 50 தமிழ் மாணவர்கள்.
ஜூன் 26ஆம் தேதி தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஏற்பாட்டில் நடந்த இந்நிகழ்ச்சியில் 'சொல்லோடு விளையாடு', 'கலையோடு உறவாடு', 'உறவோடு உரையாடு' என மாணவர்கள் மட்டுமல்லாமல் அவர்களது பெற்றோர்களையும் கவரும் வகையில் சுவாரசியமான அங்கங்கள் இடம்பெற்றிருந்தன.
புத்தாக்கச் சூழலில் தமிழ்மொழியையும் பண்பாட்டையும் உணரச் செய்யவும் பெற்றோர்-பிள்ளை இடையே உள்ள உறவை வலுப் படுத்தும் நோக்கத்தோடும் இந் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது என்று ஏற்பாட்டுக் குழுவினர் கூறினர்.
கிருமித்தொற்று காலத்தில் வெளிநாட்டிற்குச் செல்ல முடியாமல் போனாலும் விமானத்திலும் கப்பலிலும் மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் அழைத்துச் சென்றது 'அழகே! தமிழே!' நிகழ்ச்சி.
ஒவ்வொரு விளையாட்டு அங்கத்தின் நடுவில் விமானத்திலும் கப்பலிலும் பயணம் செய்து ஒரு தீவை அடைவது போன்ற மெய் நிகர் அனுபவம் மாணவர்களுக்கு உற்சாகமூட்டியது.
நிகழ்ச்சியில் வெஸ்ட் ஸ்ப்ரிங் தொடக்கப்பள்ளியில் பயிலும் மகன் குமார் கிரித்திக்குடன் பங்கேற்றார் திருமதி ரேவதி ப்ரதீப்.
"விடுமுறை நாளில் எனது மகனோடு இந்நிகழ்ச்சியின் வாயிலாக சிறப்பான முறையில் நேரத்தைச் செலவிட முடிந்தது மகிழ்ச்சியைத் தருகிறது. பலர்முன் பேச தயங்கும் எனது மகன், இந்த நிகழ்ச்சியின் நடவடிக்கைகளில் நிறைய உற்சாகத்துடனும் தைரியத்துடனும் கலந்துகொண்டு மற்ற மாணவர்கள் முன் பேச முன் வந்தது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது," என்றார் திருமதி ரேவதி.
"உறவோடு உரையாடு என்னும் அங்கத்தில் என்னை பற்றிய சில கேள்விகள் கிரித்திக்கிடமும் அவரைப் பற்றிய சில கேள்விகள் என்னிடமும் கேட்கப்பட்டன. இது மிகவும் சுவாரசியமாக இருந்தது.
"பொதுவாக இணையம் வழி மெய் நிகர் பாணியில் நடைபெறும் நிகழ்ச்சிகள் சற்று நேரம் கழித்து சலிப்பு ஏற்படும். ஆனால் இந்த நிகழ்ச்சி இணையம் வழி படைக்கப் பட்டிருந்தாலும் எங்களை ஈர்க்கும் வகையில் இருந்தது. பிள்ளைகளும் பெற்றோர்களும் இணைந்து பங்கேற்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து வழங்க வேண்டும்." என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
காயத்ரி, சஜினி போன்ற உள்ளூர் தொலைக்காட்சிப் பிரபலங்களும் விளையாட்டு அங்கங்களை அழகிய தமிழில் உற்சாகமூட்டும் வகையில் வழிநடத்தினர்.
மாணவர்களும் அவர்களது பெற்றோரும் குழுக்களாக பிரிக்கப்பட்டு 'ஸூம்' தளத்தின் தனி அறை (breakout room) நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
அப்போது குழுக்களுக்கு வழிகாட்டியாக தமிழ் இளைஞர்கள் இருந்தனர். இளைஞர்கள் தமிழில் நடவடிக்கைகளை வழிநடத்தி மாணவர்களுக்கு ஊக்கம் அளித்தனர்.
இப்படி மாணவர்கள், இளையர்கள், பெரியவர்கள் என முத்தரப்பின ரையும் ஒருங்கிணைத்து தமிழைப் புத்தாக்கத்துடன் கொண்டாடியது இந்நிகழ்ச்சி.