இர்ஷாத் முஹம்மது
வாரம் முழுதும் இந்திய பாரம்பரிய இசையை மெய்நிகர் தளத்தில் காணொளிப் பதிவு மூலம் வழங்கியது சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்.
'நாளும் ஒரு கீதம்' என்ற தலைப்பில் வெளிவந்த அந்த இசைக் காணொளிகள், உலக இசை தினத்தை முன்னிட்டு ஜூன் 21ஆம் தேதியிலிருந்து ஒவ்ெவான்றும் ஏழு நாட்களுக்கு வெளியிடப்பட்டன.
சென்ற ஆண்டுக்கான இளம் கலைஞர் விருதைப் பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் சுஷ்மா சோமசேகரன் 'நாளும் ஒரு கீதம்' தொடரை வடிவமைத்து, தயாரித்துள்ளார்.
"பாரம்பரிய இசை பற்றி தெரிந்தவர்கள் மட்டுமின்றி அனை வரும் கர்நாடக இசையை ரசிக்க வேண்டும் என்ற விருப்பமே 'நாளும் ஒரு கீதம்' உருவானதற்கான மூலக் காரணம்," என்கிறார் சுஷ்மா,
"அழகான, எளிமையான பல மெல்லிசைகளும் கவிதைகளும் புதைந்துள்ள பாடல்கள் நிறைய உள்ளன. அதனால் மக்களுக்கு அதைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் பண்பாட்டின் பல பரிணாமங்களை மக்களுக்குக் கொண்டு செல்லும் சேவையில் ஈடுபட்டுவரும் சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்துடன் இணைந்து செய்தது சிறப்பான அம்சம்," என்றும் அவர் சொன்னார்.
தொடரின் தொடக்கத்தில் 'காற்றினிலே வரும் கீதம்' எனும் பாடலுக்குப் புல்லாங்குழல் வாசித்து இசைத் தாலாட்டைப் படைத்துள்ளார் நிரஞ்சன் பாண்டியன்.
'ஞான மார்க்கம் நானே சேர' எனும் பாடலைப் பாடியுள்ளார் முனைவர் லாவண்யா பாலச்சந்திரன். யாழ் இசையில் அழகாக 'ஸ்ரீ சக்ர ராஜ' பாடலைக் கொண்டு வந்துள்ளார் அர்ச்சனா குமாரசாமி.
பல நல்ல கருத்துகளை எளிமையாக 'சினம் அடையாதே' பாடலைப் பாடியுள்ளார் வி.எம்.சாய் விக்னேஷ்வர்.
'ஆசை முகம் மறந்து போச்சே', 'குறை ஒன்றும் இல்லை' எனும் இரண்டு பாடல்களை மாலையாகக் கோர்த்துப் பாடி இசை விருந்தளித்துள்ளனர் தோழிகளான பிரியதர்ஷினி முரளி, அக்ஷயா பிரபு, புனிதா ஆறுமுகம்.
'எத்தைக்கண்டு நீ', 'வேத மொழியர்' எனும் பாடல்களை தங்கள் மகள்கள் ஷ்ரத்தா ஸ்ரீராம், ஹிரண்மயி ஆனந்துடன் பாடியுள்ளனர் இரு தாய்மார்கள் ஸ்ரீவித்யா ஸ்ரீராம், வைஷ்ணவி ஆனந்த்.
மகாகவி பாரதியார் இயற்றிய 'நல்லகாலம் வருகுது' பாடலைப் பாடியுள்ளனர் சித்ரா பூர்ணிமா, கார்த்திக் ரவீந்திரன் தம்பதியினர்.
இந்தப் பாடல்களை ஒளிப்பதிவு செய்து தரமான காணொளியாகத் தயாரித்தவர் சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தொழில் நுட்பம், தயாரிப்புக் குழுவின் உறுப் பினர் திரு நட்சத்திரம் பிரேம்குமார், வயது 34.
அண்மையில் கைபேசியிலேயே முழுநீள தமிழ்த் திரைப்படத்தைத் தயாரித்த குழுவைச் சேர்ந்த அந்த இளையர், 'நாளும் ஒரு கீதம்' தொடரை ஒளிப்பதிவு செய்து வெளியிட்டதில் மகிழ்ச்சியும் மனநிறைவும் அடைந்ததாகக் கூறினார்.
குறுகிய நேரத்தில் அனைத்து காட்சிகளையும் ஒளிப்பதிவு செய்தது சவாலாக இருந்த நிலை யிலும் தரமான காணொளியாக அது மிளிர கைகொடுத்தவர்களுக்கு நன்றி நல்கினார் அவர்.
இந்த இசைக் காணொளித் தொடரை இணைக்கப்பட்டுள்ள 'கியூஆர்' குறியீட்டை வருடி சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் இணையப்பக்கத்தில் கண்டு மகிழலாம்.