ப. பாலசுப்பிரமணியம்
ஒவ்வொரு நாளும் செய்யும் வேலையில் பாடங்களையும் அவற்றின் வழி புதிய திறன்களையும் பெற்று வருகிறார் எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் ஊழியரான திரு கா. பார்த்திபன், 44. இம்மாதம் முதல் அப்பாடங்களும் திறன்களும் அவர் மேற்கொள்ளவிருக்கும் பட்டப்படிப்பின் ஓர் அங்கமாகவுள்ளன.
வேலையில் பெறும் திறன் களைப் பட்டப்படிப்பின் ஒரு பகுதியாக சேர்க்கும் கற்றல் பாதையை சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம் (எஸ்ஐடி) அறிமுகம் செய்துள்ளது.
கழகம் தொடங்கவுள்ள புதிய பட்டப்படிப்பில் சேர்ந்துள்ள திரு பார்த்திபன், பணியிடத்தில் புதிய திறன்களைக் கற்று அதற்காக பட்டப்படிப்பு பாடங்களுக்கான மதிப்பெண்களைப் பெறுவார்.
திறன் அடிப்படையிலான வேலையிடக் கற்றல் பாதை எனும் இப்புதிய திட்டத்தைச் செயல்படுத்த போக்குவரத்து, தகவல் தொடர்பு தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங் களுடன் கழகம் கடந்த மாதம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
அதன்படி, அத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் தங்கள் துறையின் தொடர்பில் சிங்கப்பூர் தொழில் நுட்பக் கழகம் வழங்கும் பட்டப்படிப்பை மேற்கொண்டால், அவர்களது வேலை அனுபவமும் ஏற்கெனவே உள்ள திறன்களும் பாடத்திட்டத்தின் மதிப்பீட்டில் அங்கீகரிக்கப்படும்.
பாடத்திட்டத்தில் வேலையிடக் கல்வி முக்கிய இடம்பிடிக்கும்.கூடுதல் திறன் பெற வேண்டியவர்களுக்கு வழக்கமான வகுப்புகள் நடத்தப்படும். இணையம் வழியான வகுப்புகள் வேலை செய்யும் மாணவர்களுக்கு நீக்குப் போக்கைத் தரும்.
இந்தப் புதிய கற்றல் பாதை நிறுவனங்களின் பயிற்சி தேவை களைப் பூர்த்தி செய்கிறது. அதே நேரத்தில் கற்றலை மேம்படுத்த வேண்டும் எனும் ஊழியர்களின் விருப்பமும் நிறைவேறுகிறது.
அதன்படி இந்த மாதத்திலிருந்து, இரண்டு பட்டப்படிப்புகள் தொடங்கவுள்ளன. முதலாவது, தகவல், தொடர்பு தொழில்நுட்பம் (தகவல் பாதுகாப்பு) பொறியி யலில் இளநிலைப் பட்டமாகும்.
அதனுடன், நிலைத்தன்மையான உள்கட்டமைப்புப் பொறியியல் (நிலம்) துறையில் இளநிலை, முதுநிலைப் பட்டங்களும் தொடங்கப்படுகின்றன. இந்தப் பட்டப்படிப்புகளில் நிலப்போக்கு வரத்து ஆணையம், எஸ்பிஎஸ் டிரான்சிட், எஸ்எம்ஆர்டி போன்ற வற்றின் ஊழியர்கள் பயிலலாம்.
அந்த வாய்ப்பைத்தான் பயன் படுத்தியுள்ளார் கடந்த 13 ஆண்டு களாக எஸ்எம்ஆர்டி நிறுவனத்தில் பணியாற்றிவரும் திரு பார்த்திபன். வாழ்நாள் கல்வியும் திறன் மேம்பாடும் இவருக்குப் புதிதல்ல.
தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் சான்றிதழ் பெற்று எஸ்எம்ஆர்டி நிறுவனத்தில் தொழில்நுட்பராக சேர்ந்த இவர், பின்னர் நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் தகவல்தொழில் நுட்ப பட்டயக்கல்வியை பகுதி நேரமாக பயின்று 2013ல் படிப்பை முடித்தார்.
தற்போது ரயில்தட துணை பொறியியல் பராமரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றும் இவரது திறமையைக் கருத்தில் கொண்டு, எஸ்எம்ஆர்டி நிறுவனம் இவரது பகுதி நேரப் பட்டப்படிப்புக்கான செலவை ஏற்றுக்கொண்டுள்ளது.
"சில விரிவுரை வகுப்புகள் முன்னதாகவே காணொளி வழி பதிவு செய்யப்பட்டவை. அதனால் வீட்டிலிருந்தவாறு கற்கும் நீக்குப்போக்கு பிடித்திருக்கிறது. வேலையில் தொடர்ந்து முன்னேற்றம் காண வேண்டுமானால் அதற்கு வாழ்நாள் கற்றலே சிறந்த வழி என்பது அனுபவம் சொல்லித் தந்த பாடம்," என்று கூறினார் சிங்கப்பூர் நிரந்தரவாசியான திரு பார்த்திபன்.
பட்டப்படிப்புக்குப் பின்னர், ரயில்தட பராமரிப்பின் மேம்பாட்டில் பங்களிக்க ஆவலாக இருப்பதாகக் கூறிய இவர், தேவைப்பட்டால் எதிர்காலத்தில் முதுநிலைப் பட்டத்தை மேற்கொள்ளவும் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.