இர்ஷாத் முஹம்மது
சாலையோரம் காரை ஓட்டிச்செல்லும் போது கடும் வெயிலில் அயராமல் வேலைசெய்யும் வெளிநாட்டு ஊழியர்களைப் பார்த்தால் அருகில் இருக்கும் கடைக்குச் சென்று ஒரு பெட்டி 100பிளஸ் பானத்தை வாங்கி அவர்களுக்கு வழங்குவது 23 வயது பிருந்தா சிவபாலனின் வழக்கம்.
இவரது குடும்பத்தினர் அனைவருக்குமே இது இயல்பான பழக்கமும்கூட. அதற்கு மூலகாரணம் அவரது தாயார் திருமதி பிரேமா சிறுவயது முதல் தமது மூன்று மகள்களுக்கும் புகட்டிய பாடம்.
பாலர் பருவத்திலிருந்து வாடிக்கையாக செய்து வரும் அந்தச் செயல் இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு பெரும் திட்டமாக உருவெடுத்துள்ளது.
சென்ற மாதத் தொடக்கத்தில் பிருந்தாவும் அக்கா பிரதீபா, தங்கை பிரியங்கா, அம்மா பிரேமா ஆகியோரும் வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்து இந்தத் தீபாவளிக்கு வெளிநாட்டு ஊழியர்களுக்கு அன்பளிப்பு களை வழங்கி கொண்டாட்ட உணர்வைப் பரப்பலாம் என்று கலந்துரையாடி முடிவுசெய்தனர். பாதுகாப்புத் துறையில் நிறுவனத்தை நடத்திவரும் தந்தைக்கு மிகுந்த வேலைப் பளு இருப்பதால் இவர்களே இந்தத் திட்டத்தை முன்னெடுத்தனர்.
நன்றி சொல்ல ஒரு நல்ல வழி
"வசதி குறைந்தவர்கள், தேவை உடையவர்கள், மூத்தோர் என பல நிலைகளிலும் உள்ள மக்களுக்கு அரசாங்க அமைப்புகளும் இதர அமைப்புகளும் உதவி வருகின்றன. வெளிநாட்டு ஊழியர்களுக்கு அதுபோன்ற உதவித் திட்டங்கள் இருந்தாலும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு களாகத் தங்கள் குடும்பத்தினரை அவர்கள் பார்க்கவில்லை.
"அத்துடன் தங்குவிடுதியிலேயே முடங்கிக் கிடக்கும் நிலையும் அவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தைத் தந்திருக்கும். இவ்வளவு சிரமத்தில் நம் நாட்டுக்காக இவர்கள் வியர்வை சிந்தி உழைக்கின்றனர். அதற்கு நன்றி சொல்லும் விதமாகவும் இந்தத் தீபாவளி பண்டிகையின்போது நாமும் அவர்களுடன் கொண்டாட்ட உணர்வைப் பகிர்ந்துகொள்வது சிறப்பாக இருக்கும் என்று கருதினோம்," என்றார் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் மனிதவள நிர்வாகத் துறையில் இளங்கலைப் பட்டப் படிப்பைப் பயின்றுவரும் பிருந்தா.
சராசரியாக ஒருவருக்கு $10 என்று தீர்மானித்து, ஊழியர்கள் 100 பேருக்குப் பைகள் வழங்கலாம் என்றும் திட்டமிட்டனர். தங்களின் சேமிப்புடன் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் சிலரிடமும் நன்கொடை பெற்றனர்.
என்னென்ன வாங்குவது என்பது குறித்த நுணுக்கமான பட்டியல் தயாரானது. முறுக்கு, 'மிக்சர்', கடலை மிட்டாய் உட்பட நான்கு வகைப் பலகாரங்கள், இரண்டு 'கேன்' 100பிளஸ், மசாலா தேநீர் பாக்கெட், சமையலுக்கான இரு வகை மசாலா தூள் பொட்டலங்கள் என இவை அனைத்தையும் அடங்கிய அன்பளிப்புப் பைகளைத் தயார் செய்தனர்.
எதிர்பார்த்ததைவிட இரட்டிப்புத் தொகை
'வாட்ஸ்அப்' மூலம் அனுப்பிய குறுஞ்செய்திகளுக்கு வரவேற்பும் இந்த மகளிர் அணியை மனம் குளிரச் செய்தது. எதிர்பார்த்த $1,000ஐக் காட்டிலும் இரட்டிப்பு தொகை கிடைத்தது. $2,000ஐத் தாண்டிய நன்கொடைத் தொகை சேர்ந்தது.
மொத்தம் 150 ஊழியர்களுக்காக இன்னும் அதிகமான பொருட்களை அடங்கியபைகளைத் தயார் செய்யத் தொடங்கினர். இணையம் மூலம் மொத்த விநியோக நிறுவனங்களைத் தொடர்புகொண்டு பொருட்களை வாங்கினர்.
இவர்களின் நெருக்கமான நண்பர்கள் இருவர் வீட்டிற்கு வந்து பைகளில் பொருட்களை வைக்க கைகொடுத்தனர்.
பரிசுப் பொட்டலங்களைத் தயார்செய்யும் அனைத்து வேலைகளையும் வீட்டிலேயே செய்த இவர்கள் கடந்த மாதம் 30ஆம் தேதி அவற்றை விநியோகித்தனர்.
பிருந்தா அண்மையில் புதிய வீடமைப்புப் பேட்டை கட்டுமானத் தளத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த ஊழியருக்குப் பானம் வழங்கியபோது தமது திட்டம் பற்றி பகிர்ந்தார். அத்துடன், அவரது நண்பர்கள் தொடர்பு எண்களையும் வாங்கிவந்தார்.
அந்தத் தொடர்புகளைக் கொண்டு ஜூரோங் பெஞ்சுரு தங்குவிடுதி 1, சுவா சூ காங், பொங்கோல் ஆகிய மூன்று தங்குவிடுதிகளுக்கும் காரில் சென்று அன்பளிப்புப் பைகளை வழங்கி வந்தனர்.
"குடும்பத்தினருடன் சென்று அன் பளிப்புப் பைகளை வழங்கும்போது அவர்கள் முகத்தில் நாங்கள் கண்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தையே இல்லை. அதில் எங்களுக்குக் கிடைத்த மனநிறைவே இந்த தீபாவளிக் கொண்டாட்டத்தில் எங்களுக்குக் கிடைத்த பெருமகிழ்ச்சி," என்றார் பிருந்தா.
கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகளால் வீட்டில் உற்றார் உறவினர்களை அழைத்து இவ்வாண்டு பெரியளவில் கொண்டாட முடியவில்லை. எனினும், தங்கள் இல்லத்தையும் தாண்டிய கொண்டாட்டம் இவ்வாண்டு இக்குடும்பத்துக்குக் கிடைத்தது.
அனைவரையும் உள்ளடக்கிய முழுமையான குதூகலத்தைத் தந்ததிலும் பெற்றதிலும் நெகிழ்ச்சியடைந்துள்ளனர் இவர்கள்.
"இந்த நிச்சயமற்ற காலத்தில் ஒவ்வொரு வரும் ஏதோ ஒரு விதத்தில் சவால்களை எதிர்நோக்குகின்றோம். இப்படிப்பட்ட சூழலில் நம்மால் முடிந்த சிறு வழிகளில் நாம் காட்டும் அன்பு, சிலருக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்," என்று பிருந்தா குறிப்பிட்டார்.
இந்த அன்பும் பரிவும் பரவவேண்டும் என்ற எண்ணத்தில் அன்பளிப்புப் பைகள் வழங்கியதைத் தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்ட பிருந்தாவிற்கு மேலும் நெகிழ்ச்சி காத்திருந்தது.
"என் நண்பர்கள் பலர் இப்போது என் சமூக ஊடகத் தளத்தில் தொடர்புகொண்டு தாங்களும் இத்திட்டத்தில் இணைய விரும்புவதாகக் கூறினர். வரும் காலங்களில் தங்களையும் ஈடுபடுத்திக்கொள்ளு மாறும் என்னைக் கேட்டனர்.
"இதுபோல அனைவரும் அவரவர் பங்கை ஆற்றினால் இந்த உலகம் இன்னும் அழகாகும்," என்றார் பிருந்தா. அடுத்ததாக எதிர்வரும் ஜனவரி மாதம் பொங்கலை முன்னிட்டு அன்பளிப்புப் பைகள் வழங்க திட்டம் தீட்ட உள்ளதாக பிருந்தா கூறினார்.