சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர் களில் ஒருவரான அமரர் மு. தங்கராசனின் (படம்) படைப்பாக்கங்களை ஆய்வுப் பொருண்மையாகக் கொண்டு பன்னாட்டுக் கருத்தரங்கம் வரும் சனிக்கிழமையன்று (13/11/2021) தமிழ் நாட்டின் மதுரை நகரில் உள்ள உலகத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற இருக்கிறது.
மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், குறிஞ்சி தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மையம் ஆகியவற்றின் முயற்சியில் இப்பன்னாட்டுக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழாசிரியராக சேவையாற்றிய மு. தங்கராசன், கலை, இலக்கியத்திலும் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தவர். தமிழவேள் நாடக மன்றம் என்ற அமைப்பை நிறுவி நாடகங்களை மேடையேற்றியதுடன், கவிதை, சிறுகதை, நாடகம், கட்டுரை என 40 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் தமது 86வது வயதில் மரணமடைந்த அவரது இலக்கியப் பணியை சிங்கப்பூருக்கு அப்பால், உலக அரங்கில் அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்த அனைத்துலகக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் சிங்கப்பூர் தேசிய நூலக இணையப்பக்கத்தின் துணைகொண்டு தமிழறிஞர் மு. தங்கராசனாரின் நூல்களை பார்வையிட்டுத் தம் ஆய்வுக்கட்டுரைக்கு ஏற்ற வகையில் நூல்களைத் தெரிவுசெய்து ஆய்வுக்கட்டுரைகளைப் படைத்தளித்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் இக்கருத்தரங்கிற்கெனச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவை இரண்டு தொகுதிகளாக நூல் வடிவில் வெளியிடப்படவுள்ளன.
மு. தங்கராசனின் நூல்களில் வெளிப்படும் மொழிப்பற்று, சமுதாயப் பார்வை, வாழ்வியல் நோக்கு, கவித்துவம் முதலான கூறுகளை நன்முறையில் ஆய்வுசெய்து படைப்புகள் அமையப்பெற்றுள்ளன.
இக்கருத்தரங்கின் தொடக்க விழாவில் உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குநர், முனைர் தா. லலிதா தலைமையுரையும், சிங்கப்பூரின் தமிழறிஞர் முனைவர் சுப. திண்ணப்பன் வாழ்த்துரையும் வழங்கவுள்ளனர். மேலும் பேராசிரியர் சாலமன் பாப்பையா சிறப்புரை ஆற்றுகிறார்.
கருத்தரங்கின் நிறைவு விழாவில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக, தமிழியற்புலத்தின் மேனாள் தலைவர், முனைவர் மு. மணிவேல் தலைமையுரையும் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் தலைவர் முனைவர் ஒ. முத்தையா வாழ்த்துரையும் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் ஆலோசகரும் முன்னாள் தலைவருமான திரு சி சாமிக்கண்ணு அனுபவ உரையும் வழங்குகின்றனர்.
சாகத்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் சிறப்புரை ஆற்றவிருக்கிறார். கருத்தரங்கில் மெய்நிகர் வழியில் பங்கேற்க: Zoom ID : 555 666 1997 Password : 1991009