தமிழ்நாட்டின் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த திருமதி ராஜேஸ்வரி மாரியப்பன் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இதய அறுவை சிகிச்சை செய்வதற்காக சிங்கப்பூரில் கட்டுமானத் துறையில் பணிபுரியும் தன் மகன் மா.பார்த்திபன் வருகைக்காக ஏங்கிக் காத்திருக் கிறார். ஆனால் உடனடியாக இங்கிருந்து ஊருக்குச் செல்ல முடியாத திண்டாட்டத்தில் மனம் சீர்குலைந்த நிலையில் இருக்கிறார் பார்த்திபன்.
ஒரு வாரமாக முயற்சி செய்தும் எந்த விமானப் பயணச்சீட்டும் கிடைக்காத நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' நிறுவனம், 'வந்தே பாரத்' மீட்பு விமானச் சேவையின் டிசம்பர் மாத அட்டவணையை வெளி யாக்கியதும் டிசம்பர் முதல் வாரத்தில் திருச்சி செல்வதற்கான விமானச்சீட்டை முந்திக்கொண்டு வாங்கிவிட்டார் அவர்.
தம் தாயார் அறுவைச் சிகிச்சைக்குச் செல்லும் முன்னர் நம்பிக்கை தருவதற்கும் மன ஆறுதல் பெறுவதற்கும் சொந்த ஊர் செல்லத் திட்டமிட்டார் நான்கு ஆண்டு களுக்கு முன்னர் சிங்கப்பூர் வந்த பார்த்திபன், 35.
"கடந்த ஒரு வாரமாக மிகவும் சிரமப்பட்டேன். இந்தியாவிற்குச் செல்ல எந்த நேரடி விமானச் சேவையும் இல்லை. இலங்கை வழியாகவோ துபாய் வழியாகவோ திருச்சி செல்லலாம் என்று சில பயண முகவர்கள் சொன்னார்கள்," என்று கூறிய பார்த்திபன், ஒருவழி பயணச் சீட்டின் விலை $600 முதல் $800 வரை இருந்தது என்றார்.
சிங்கப்பூரரான பாலகுமரன் கிருஷ்ணன், 48, தம் உறவினர்
களைச் சந்திக்கவும் இயற்கையை ரசிக்கவும் விடுமுறையைக் கழிக்கவும் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை தமிழ்நாட்டிற்குச் செல்வது வழக்கம். பல ஆண்டு
களாகச் செய்து வந்ததை கொரோனா காலத்தில் நிறுத்த வேண்டியதாயிற்று.
ஆனால் தடுப்பூசி போட்டோருக்கான பயணத்தடத் திட்டத்தின் அறிவிப்பு வந்தவுடன் இந்தியாவின் பாண்டிச்சேரி, தஞ்சாவூர், ஊட்டி போன்ற இடங்களுக்குச் சென்று வர மீண்டும் ஆசை பிறந்துவிட்டதாகக் கூறினார் பொறியாளராகப் பணிபுரியும் அவர்.
சிங்கப்பூருக்கும் இந்தியாவிற்கும் இடையில் 'விடிஎல்' எனப்படும் தடுப்பூசி போட்டோருக்கான பயணத்தடத் திட்டம் இம்மாதம் 29ஆம் தேதி தொடங்கும் என போக்கு
வரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் கடந்த திங்கட்கிழமை அறிவித்தார்.
அதன்படி, மற்ற நாடுகளுடன் சிங்கப்பூர் செயல்படுத்திவரும் 'விடிஎல்' திட்டங்கள் போலவே தடுப்பூசி போட்டோர் இல்லத்தனிமை உத்தரவை நிறைவேற்றும் அவசியம் இருக்காது.
சென்னை, மும்பை, புதுடெல்லி ஆகிய மூன்று நகரங்களிலிருந்து தினமும் இரண்டு விமானச் சேவைகள் இத்திட்டத்தின்கீழ் இயக்கப்படும் என்றும் அமைச்சர் விளக்கினார்.
கொவிட்-19 கிருமிப் பரவல் காரணமாகச் சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சிங்கப்பூருக்கும் இந்தியாவிற்கும் சாதாரண பயணிகள், வர்த்தக விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டன.
அப்போது இந்தியாவில் சிக்கித் தவித்த சிங்கப்பூர்வாசிகளை மீட்க சிங்கப்பூர் விமானச் சேவைகள் சில இயங்கின.
"தொழில் சார்ந்த பணிகளுக்காக இந்தியா சென்றிருந்தேன். அப்போது இவ்வளவு சிக்கல் ஏற்படும் என்று தெரியவில்லை. பின்னர் 'ஸ்கூட்' விமானச் சேவை மூலம் அரசாங்கம் மீட்புப் பயணத்தை ஏற்பாடு செய்திருந்ததை அறிந்து அதில் பதிவு செய்து ஒரு வழியாக சிங்கப்பூர் வந்து சேர்ந்தேன்," என்றார் தொழில்முனைவர் வீ.அன்பழகன்.
அன்றுமுதல் இன்றுவரை இரு நாடுகளையும் இணைக்கும் பயணிகள் சேவைக்கு மூலாதாரம் 'வந்தே பாரத்' மீட்பு விமானச் சேவைகளே. அதனுடன் அவ்வப்போது தனி
நபர்கள், முகவர்கள் தனியார் குத்தகை மூலம் ஓரிரு விமானப் பயணங்களை ஏற்பாடு செய்துள்ளனர்.
ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய நிறுவனங்கள் வந்தே பாரத் விமானச் சேவைகளை இயக்கி வருகின்றன.
"அடுத்த வாரம் முதல் செயல்பட இருக்கும் விடிஎல் திட்டம் ஒருவகை மனநிம்மதியை எங்களைப் போன்றோருக்குத் தந்துள்ளது," என்றார் சிங்கப்பூர் நிரந்தரவாசி யான முத்தையா குழந்தை.
சொந்தத் தொழில் நடத்திவரும் அவர், தம் மனைவி, மகளுடன் 20 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வசிக்கிறார். அவர்தம் பெற்றோர், சகோதரர்கள், சகோதரிகள் அனை வரும் தமிழ்நாட்டின் மதுரையில் வசிக்கின்றனர். ஆண்டுக்கு இரு முறை மதுரைக்குச் சென்று வரு வதை வழக்கமாக் கெண்டிருந்தார் அவர்.
சிங்கப்பூரில் தற்போது வசிக்கும் இவரைப் போன்றோருக்கு இல்லத் தனிமை உத்தரவு இல்லாத விடிஎல் திட்டம் பெரும் வரமாக அமையும் என்றாலும் இங்கிருந்து இந்தியா செல்வதற்கான விமானப் பயணச் சேவைகள் தேவையான அளவுக்கு இல்லாதது வருத்தத்தை யும் விரக்தியையும் தருவதாகக் கூறுகின்றனர்.
"அவசரமாக இந்தியா செல் கிறவர்கள் பாடு திண்டாட்டம்தான். என் நண்பரின் தாயார் இறந்துவிட்ட செய்தி கிடைத்து அவர் தவித்த நிலையில் திருச்சி அல்லது சென்னைக்கு டிக்கெட் வாங்க முயன்ற போது எங்கும் கிடைக்கவில்லை," என்று சென்ற வாரம் நடந்த சம்பவத்தைப் பற்றி விவரித்தார் வீரன் ரவிச்சந்திரன், 62.
இத்தகைய சூழலில் விடிஎல் திட்டம் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு பல்வேறு காரணங்களுக்காக வர காத்திருப்போருக்கு நம்பிக்கை தரும் நற்செய்தியாகவே உள்ளது.
"சிங்கப்பூர் வந்து செல்வதில்தான் எங்களுக்கு வருமானமே உள்ளது. பொருட்களை இங்கிருந்து எடுத்து சென்று விற்போம். அங்கிருந்து பொருட்களைக் கொண்டு வந்து இங்கு விற்போம். இதெல்லாம் ஒன்றரை ஆண்டுகளாக இல்லாமல் நிரம்ப சிரமப்பட்டோம்.
"தனிமை உத்தரவு எங்களுக்கு பலனளிக்காது. அதனால் இந்த விடிஎல் வந்தால் வாய்ப்பை ஆராய்வோம். எல்லாம் டிக்கெட் விலையைப் பொறுத்து இருக்கிறது," என்று கூறினார் 25 ஆண்டுகளாக மாதம் இருமுறை சிங்கப்பூர் வந்து செல்லும் திரு நடராஜன்.
சுற்றுப்பயணத்திற்கு இந்தியர்கள் விரும்பும் இடமாக சிங்கப்பூர் விளங்குகிறது என்றார் சென்னையில் பயண முகவை நடத்திவரும் திரு முகமது இக்பால்.
"ஜோடியாக, குடும்பமாக, நண்பர்களாக, சக ஊழியர்களாக, பெரிய குழுக்களாக என பலதரப்பட்ட அளவில் சிங்கப்பூருக்கான சுற்றுப்
பயண ஏற்பாடுகளை பல ஆண்டு களாகச் செய்துவருகிறேன்.
"சிங்கப்பூர் என்றாலே இங்குள்ளவர்கள் அதிகம் விரும்புவது விடு
முறைக்காலப் பயணம்தான். ஆண்டின் எந்த நேரத்திலும் அதற்கான தேவை இருந்தது. கொரோனா எல்லாவற்றையும் நிறுத்தியது.
"இந்தப் புதிய ஏற்பாடு நடை முறைக்கு வரும் நாளை எதிர் பார்த்துப் பலரும் காத்துக் கிடக் கின்றனர்," என்றார் அவர்.
தற்போது இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வருவோர் ஏழு நாட்கள் இல்லத் தனிமை உத்தரவை நிறைவேற்றவேண்டும் என்ற நிலை. அதனால் இந்தியர்கள், வாய்ப்பு இருக்கும் வேறு நாடுகளுக்குச் சுற்றுலா சென்றுவருவதாக அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் மின்னியல் சாதனங்கள், விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் போன்றவற்றை வாங்கு வதற்கும் ஓய்வுப்பயண விடு
முறைக்காகவும் வருவது திருவாட்டி அனிதாவிற்குப் பிடித்தமான ஒன்று. மீண்டும் அது சாத்தியமாவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார் பெங்களூரில் வசிக்கும் அவர். சென்னை வழியாக சிங்கப்பூர் வர முயற்சி செய்யப்போவதாக அவர் கூறினார்.
'விடிஎல்' திட்டத்தில் சேர்க்கப் பட்டுள்ள விமானச் சேவைகள் விரைவில் இன்னும் அதிகரிக்கப் படவேண்டும் என பலர் விருப்பம் தெரிவித்தனர்.
"அதோடு ஏராளமான வெளிநாட்டு ஊழியர்கள் இருவழிகளிலும் பயணம் மேற்கொள்ளக் காத்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டிற்கு இன்னும் அதிக விமானச் சேவைகள், குறிப்பாக திருச்சியிலிருந்து 'விடிஎல்' சேவைகளை வழங்கவேண்டும் என்றும் பலர் கேட்டுக்கொண்டனர்.
"பெரும்பாலான ஊழியர்கள் திருச்சியைச் சுற்றியுள்ள மன்னார்குடி, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை போன்ற நகரங்
களிலிருந்து வருகின்றனர்.
"அதனால் திருச்சி செல்வதற்கும் அங்கிருந்து வருவதற்கும் தேவை அதிகமாக இருப்பது வழக்கமான ஒன்று," என்றார் பத்தாண்டுகளாக சிங்கப்பூரில் 'தஞ்சை டிராவல் அண்ட் டூர்ஸ்' நிறுவனத்தை நடத்தி வரும் திரு அப்துல் காதர், 41.
"டிசம்பரில் திருச்சிக்குச் செல்லும் வந்தே பாரத் சேவைக்கான பதிவு ஒரே இரவில் வியாழனன்று விற்றுத் தீர்ந்தது," என்றார் அவர். சனிக்கிழமை (நேற்று) நிலவரப்படி டிசம்பர் மாதம் 28ஆம் தேதிவரை இந்தியாவிற்கு நேரடியாகச் செல்
வதற்கான விமானச் சீட்டுகள் அனைத்தும் தீர்ந்துவிட்டன.
ஒருவழி விமானச் சேவைக்கான கட்டணம் $393 என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த வாரம் ஏர் இந்தியா விமானம், சென்னை, புதுடெல்லி, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களுக்கான மீட்புச் சேவை பயணச்சீட்டு களை விற்பனைக்குத் திறந்ததும் விரைவாக விற்றுத் தீர்ந்தன என்றும் முகவர்கள் கூறினர்.
ஒருவழிப் பயணச்சீட்டின் விலை $495 என நிர்ணயிக்கப்பட்டிருந்த தையும் அவர்கள் பகிர்ந்தனர். ஜனவரி மாதம் வரை அனைத்து பயணச்சீட்டுகளும் விற்றுத் தீர்ந்த நிலையில் இனி 'விடிஎல்' சிறப்பு விமானச் சேவைகளோ இதர புதிய ஏற்பாடுகளோதான் ஒரே வழி.
கடந்த ஆண்டு முற்பாதியில் இருந்தே கொவிட்-19 கிருமித்தொற்று உலகம் முழுதும் தலைவிரித்தாடியதால் சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகப் பயணச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. அதன் விளைவாக இருநாட்டிற்கும் அதன் மக்களுக்கும் இடையிலான தொடர்புகளில் நீண்ட இடைவெளி விழுந்தது. அண்மையில், தடுப்பூசி போட்டோருக்கான பயணத் திட்டத்தில் இந்தியாவையும் சிங்கப்பூர் இணைத்ததன் மூலம் இயல்புநிலை திரும்பும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் பலர்.