ப. பாலசுப்பிரமணியம்
அஞ்சல்தலையை ஒட்டி, திருமண அழைப்பிதழை அனுப்புவதற்குப் பதிலாக மின்னஞ்சல் அல்லது 'வாட்ஸ்அப்' செயலி வழி திருமண அழைப்பிதழை அனுப்பும் போக்கு அண்மைய ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது.
திருமணம் முடிந்த பிறகு திருமண அழைப்பிதழை அப்புறப்படுத்துவோர் மத்தியில், அதைப் பத்திரப்படுத்திச் சேகரித்தும் வருகிறார் சன்லவ் இல்லத்தின் தலைமைத் திட்ட அதிகாரியான திரு க.ராஜமோகன். கடந்த 16 ஆண்டுகளாக துணைத் திருமணப் பதிவாளராக சேவையாற்றி வரும் திரு ராஜமோகன், ஒரு திருமண அழைப்பிதழை உருவாக்குவதில் இரு குடும்பத்தினரின் பங்கு ஏராளம் அடங்கியுள்ளது என்று வலியுறுத்தினார்.
திருமண அழைப்பிதழின் தனித்துவமான வடிவமைப்பு, அதில் தம்பதியினருக்காக சேர்க்கப்படும் பொன்மொழிகள் போன்றவற்றுக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற எண்ணமே நாளடைவில் அவற்றை சேகரிக்கத் தம்மைத் தூண்டியதாக திரு ராஜமோகன் தெரிவித்தார்.
தம்முடைய உறவினர், நண்பர்கள் மற்றும் தாம் பதிவு செய்ய உதவும் திருமணத் தம்பதிகளிடமிருந்து தொடங்கி, இதுவரையில் 400க்கும் மேற்பட்ட திருமண அழைப்பிதழ்கள் தம்மிடம் குவிந்துள்ளன.
தம் அலுவலக மேசையில் சில திருமண அழைப்பிதழ்களைக் காட்சிக்கு வைத்திருப்பது, சக ஊழியர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது. அமைப்பில் தொண்டூழியம் புரிய வரும் இளையர்களையும் இவரின் வித்தியாசமான பொழுதுபோக்கு கவர்ந்துள்ளது.
ஒவ்வொருமுறையும் இந்த திருமண அழைப்பிதழ்களைப் பார்க்கும்போது, அதனை அனுப்பிய தம்பதியினரின் திருமண நினைவலைகள் அவர் மனதில் வந்துபோகும். சில ஆண்டுகள் கழித்து அதே தம்பதிகளுக்குத் திருமண நாள் வாழ்த்து தெரிவிக்கும்போது, அத்துடன் தம்பதியின் திருமண அழைப்பிதழைக் காட்டும் புகைப்படத்தையும் அவர் கைபேசியில் அனுப்பிவைப்பாராம்.
"அவர்களின் திருமண அழைப்பிதழை இன்னமும் நான் வைத்திருக்கிறேன் என்ற இன்ப அதிர்ச்சியில் அவர்கள் இருப்பார்கள். திருமண ஏற்பாடுகளுக்கு வசதியாக தற்போது மின்னிலக்க அழைப்பிதழ்கள் பிரபலாகி வர, இதுபோன்ற திருமண அழைப்பிதழ்கள் எதிர்காலத்தில் அரிதாகிவிடும்," என்று கூறினார் 61 வயது திரு ராஜமோகன்.
ஓர் ஆண்டில் சுமார் 40 திருமணங்கள் வரை திரு ராஜமோகன் பதிவு செய்கிறார்.
"திருமணத்தில் மூன்று அம்சங்கள் முக்கியமானவை. ஒருவரை ஒருவர் மதித்து நடப்பது, ஒருவருக்கொருவர் வெளிப்படையாகப் பேசுவது, ஆணவத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது ஆகியவையே அவை. இந்த வரிகளை நான் திருமண அழைப்பிதழ் ஒன்றில் படித்தேன், ரசித்தேன்," என்று குறிப்பிட்டார் திரு ராஜமோகன்.
துணைத் திருமணப் பதிவாளராக பல்லாண்டு காலம் சேவையாற்றி வரும் திரு ராஜமோகனுக்கு இவ்வாண்டு தொடக்கத்தில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் 'கம்யூனிட்டி கேர்ஸ்' விருது வழங்கப்பட்டது.
இவ்விருது சமூக மாற்றத்திற்கு வழிவகுத்து தொண்டு புரியும் நபர்களையும் அமைப்புகளையும் அங்கீகரிக்கிறது.
தாம் சேகரித்துள்ள திருமண அழைப்பிதழ்களைக் கண்காட்சி ஒன்றில் வைப்பதே திரு ராஜமோகனின் விருப்பமாகும்.