கி.ஜனார்த்தனன்
பொங்கல் திருநாள் வெறும் பண்டிகை மட்டுமல்ல, அது தமிழினத்தின் பேரடையாளம்! உலகிற்கு அமுது படைத்திடும் உழவர்களின் ஓயாத உழைப்பை உணர்த்தும் அறுவடைத் திருநாள்! நாளும் ஒளிதந்து மனிதகுலத்தின் வாழ்வில் ஒளியேற்றி வைக்கும் கதிரவனுக்கும் கால்நடைச் செல்வங்களுக்கும் நன்றிநவிலும் நன்னாள்!
உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளை வெகுசிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.
அவ்வகையில், சிங்கப்பூரிலும் 'தமிழர் திருநாளை' பெருமகிழ்ச்சியோடு வரவேற்று, பேரின்பம் கண்ட சில குடும்பங்களைத் தமிழ் முரசு சந்தித்தது.
சமயம் கடந்த சங்கமம்
பொங்கல் திருநாளை முக்கியப் பண்டிகையாகக் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறினார் அடித்தளத் தலைவரும் கல்வியாளருமான திரு நசீர் கனி, 63.
"இந்து சமயத்தவரான எங்கள் வீட்டுப் பணிப்பெண்கள் பொங்கல் வைத்து, எங்களுக்குப் பரிமாறுவர்," என்றார் வெஸ்ட் கோஸ்ட் சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுத் தலைவருமான திரு கனி.
பல இன, சமயத்தினர் வாழும் சிங்கப்பூரில் எல்லாக் கொண்டாட்டங்களிலும் பங்குகொள்ளும் வாய்ப்புகள் ஏராளமாக இருப்பதாக அவரின் துணைவியார் திருவாட்டி மும்தாஜ் பீவி, 57, குறிப்பிட்டார்.
தமது குடும்பத்திலும் பொங்கல் திருநாளைக் கொண்டாடும் வழக்கம் இருந்ததாகக் கூறிய அவர், தங்கள் வீட்டிலும் தம் தாயார் சர்க்கரைப் பொங்கலும் வெண்பொங்கலும் செய்வார் என்று சொன்னார்.
அலெக்சாண்டிரா எஸ்டேட் வட்டாரத்தில் வளர்ந்த திரு நசீர், பொங்கல் திருநாளின்போது வெகுசிறப்பாக கேளிக்கை மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டதை நினைவுகூர்ந்தார்.
நண்பர்களுடன் பொங்கல் திருநாளைக் கொண்டாடுவதைப் பெரிதும் விரும்புகிறார் இத்தம்பதியரின் மகனும் ஆசிரியருமான அமீர் ரோஷன், 29.
ஈராண்டுகளுக்குமுன் தங்களது வீட்டிலேயே வளர்ந்த செங்கரும்பை நண்பர் மணிகண்டனுடன் சேர்ந்து சுவைத்த இனிய தருணத்தை நினைவுகூர்ந்தார் திரு அமீர்.
இதன்மூலம் உழவர்களின் சிரமத்தையும் தம்மால் உணர முடிந்ததாக அவர் சொன்னார்.
இவர்களின் வீட்டில் இப்போது பணிப்பெண்ணாக இருக்கும் திருவாட்டி சுமதி, உற்சாகமும் விறுவிறுப்பும் நிறைந்த தமிழகப் பொங்கல் கொண்டாட்டங்களை சிங்கப்பூரிலும் தொடர முடிந்ததை நினைத்து மகிழ்வதாகக் கூறினார்.
உறவுகளுக்கான பொன்னாள்
பொங்கல் திருநாளின் இறுதி நாளான காணும் பொங்கல், உறவுகள் கூடி, அளவளாவி, பிணைப்பை வலுப்படுத்தும் பொன்னாள்.
அதற்கேற்ப, ரவிக்குமார் ஜம்புநாதன் - விசாலாக்ஷி நாகநாதன் இணையர் வீட்டிலும் இம்முறை பொங்கல் திருநாள் களைகட்டியுள்ளது. திருவாட்டி விசாலாக்ஷியின் சகோதரர் திரு வரதராஜனும் அவரின் மனைவி திருவாட்டி அனுஷாவும் இம்முறை அவர்களுடன் இணைந்து பொங்கல் திருநாளைக் கொண்டாடுவதே அதற்குக் காரணம்.
சூரியனுக்கு வழிபாடு இருந்தாலும் சமயம் சார்ந்ததாக இல்லாமல் அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைப்பதாகத் திகழ்வதே தமிழர் திருநாளின் சிறப்பு என்றார் வங்கி நிர்வாகியாகப் பணியாற்றும் திரு ரவிக்குமார்.
"ஒற்றுமையைப் பறைசாற்றும் 'காக்காப்பிடி கண்ணுப்பிடி' எனப்படும் கலந்த சாதத்தை வழங்குவதும் என் குடும்ப வழக்கமாக உள்ளது," என்று திருச்சிராப்பள்ளியைப் பூர்வீகமாகக் கொண்ட திருவாட்டி விசாலாக்ஷி கூறினார்.
கொவிட்-19 கிருமிப்பரவலால் ஒன்றுகூடல்கள் வீட்டில் எளிமையாக நடப்பது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார் அவரின் தாயார் திருவாட்டி கல்யாணி நாகநாதன், 72.
செல்லப் பிராணிகளுடன்...
கடந்த 16 ஆண்டுகளாக பொங்கல் திருநாளன்று விடுப்பு எடுத்துவிடுகிறார் வங்கியாளரான திரு மதிவண்ணன், 39. பள்ளியில் நிர்வாக உதவியாளராகப் பணிபுரியும் தம் மனைவி அனுபிரியாவுடனும் பிள்ளைகளைப்போல் வளர்த்துவரும் செல்ல நாய்க்குட்டிகள் ஃபிலஃப், ஜிம்முடனும் பொங்கல் திருநாளை இவர் கொண்டாடி வருகிறார்.
வீட்டில் தாங்கள் இருவர் மட்டுமே இருந்தாலும் எளிமையாக இல்லாமல் விதவிதமாகச் சமைப்பதில் மனநிறைவு அடைவதாகக் கூறினார் திருவாட்டி அனுபிரியா.
"கிருமிப் பரவலால் மற்றவர்களை வீட்டிற்கு அழைக்க முடியவில்லை. இருப்பினும், உணவு சமைத்து, அவற்றைத் தாய்-தந்தையர், உறவினர், அண்டை வீடுகளில் வசிக்கும் சீன, மலாய் குடும்பங்களுக்கு வழங்கி மகிழ்வோம்," என்றார் அவர். பொங்கலன்று தங்கள் பெற்றோர்களைக் கண்டு, இவர்கள் ஆசிபெற்று வந்தனர்.