ஆ. விஷ்ணு வர்தினி
சிங்கப்பூரின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான இராம. கண்ணபிரான், மூத்த நாடகக் கலைஞர் ச. வரதன் இருவரும் இவ்வாண்டின் தமிழ்ச்சுடர் வாழ்நாள் சாதனையாளர்களாக கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூரில் வாழும் மொழியாக தமிழ் மொழி நிலைத்து வளர பங்காற்றி வரும் முன்னோடிகளையும் இளையர்களையும் தமிழ்ச்சுடர் விருது நிகழ்வு அங்கீகரிக்கிறது.
மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவும் தமிழ் மொழி கற்றல், வளர்ச்சிக் குழுவும் இணைந்து நேற்று முன்தினம் நடத்திய இந்நிகழ்ச்சியில், கல்வி, கலைத் துறைகளில் பங்காற்றியவர்கள், இளம், வாழ்நாள் சாதனையாளர்கள், சிறப்பு விருது என ஐந்து பிரிவுகளில் மொத்தம் எட்டு விருதுகள் வழங்கப்பட்டன.
நூற்றுக்கும் மேற்பட்ட பரிந்துரைகள் இவ்வாண்டின் தமிழ்ச்சுடர் விருதுக்கு வந்திருந்ததைக் குறிப்பிட்ட, நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான கல்வி அமைச்சின் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவர் திரு விக்ரம் நாயர் தமிழ் மொழி நிலைத்திருக்கப் பங்காற்றுவோரும் அவர்களின் பங்களிப்பைக் கொண்டாடுவோரும் அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
தமிழ்மொழி வாழும் மொழியாக நிலைத்திருக்கும் என்பதற்கு இது நல்லதொரு அறிகுறி என்று செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு விக்ரம் குறிப்பிட்டார்.
"தமிழ் இலக்கியத்தில் சிங்கப்பூரின் மண்மணம் வீசவேண்டும் என்பதும் மனித நெறிகள் மேலோங்கவேண்டும் என்பதுமே எனது குறிக்கோள்களாய் உள்ளன.
"தமிழ்ச்சுடர் விருது நிகழ்வில் பல இளையர்கள் மேடையேறியது என்னைப் பூரிக்க வைக்கின்றது," என்றார் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற 79 வயது திரு இராம. கண்ணபிரான்.
150 கட்டுரைகளும் 50 சிறுகதை, நாவல்களையும் எழுதியுள்ள திரு இராம. கண்ணபிரான், ஒன்றரை நூற்றாண்டு தொன்மை வாய்ந்த சிங்கப்பூரின் இலக்கிய வரலாற்றில் தடம் பதித்தவர்.
"விருதுகளுக்காகவன்றி, ஆத்மார்த்தமான முறையில் தமிழருக்காக சேவையாற்றியுள்ளேன். நாளும் தமிழ், நாவில் தமிழ் என்ற தமிழர் தாரக மந்திரம் சிங்கப்பூரில் முழங்குவது குறித்துப் பெருமிதமடைகிறேன்," என்றார் வாழ்நாள் சாதனையாளர் விருதுபெற்ற மற்றொருவரான ச. வரதன்.
திரு ச. வரதன், பகுத்தறிவு நாடக மன்றத்தைத் தொடங்கியவர். சிங்கப்பூரின் ஒலி, ஒளி ஊடகங்களுக்குப் பங்காற்றியுள்ள இவர் பல விருதுகளைப் பெற்றிருக்கின்றார். 88 வயதாகும் திரு வரதன், 'நீங்கா நினைவுகள்' என்ற இருமொழி நூலை எழுதி வருகிறார்.
இளம் சாதனையாளர் விருது பெற்ற 26 வயது அரு. சுப்பு அடைக்கலவன். நன்யாங் தொழிநுட்பப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்ற தலைவராகப் பல தமிழ் நிகழ்வுகளை வழிநடத்தியவர்.
"எதிர்காலத்தில் தமிழர்களுக்குத் தமிழ் சார்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் பெற்றுத் தருவதிலும் பொறுப்பு வகிக்க விரும்புகிறேன். தமிழர்களின் திறன் மேம்பாட்டிற்குத் துணைபுரியும் நடவடிக்கைகள் மிக முக்கியம். கொவிட்-19 சூழலுக்கேற்ப தமிழ் நிகழ்வுகளின் பாணியும் மாறவேண்டும்," என்றார் அறிவியல், தொழில்நுட்ப, ஆய்வு அமைப்பில் பொறியியலாளராகப் பணிபுரியும் திரு சுப்பு.
கல்வி பிரிவில் தமிழ் மொழிவளர்ச்சிக்கு முனைந்து பாடுபடும் ரிவர்சைட் உயர்நிலைப் பள்ளிக்கும் யூஹுவா உயர்நிலைப் பள்ளிக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
தமிழாசிரியர்கள் திரு ர. பாலசுப்பிரமணியம், திருமதி கி. கவிதா இருவரும் சிறப்பிக்கப்பட்டனர்.
அகம் தியேட்டர் லேப் அமைப்பும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரவையும் கலைப் பிரிவில் விருதுகள் பெற்றன.
"தொடர்ந்து கலைத்துறைக்குப் பணியாற்ற இவ்விருது ஊக்கமளிக்கி்றது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தமிழ் நாடகங்களைப் பிரபலப்படுத்த எண்ணுகிறோம்," என்று கூறினார் 'அகம் தியேட்டர்' நிறுவனரும் இயக்குநருமான திரு சுப்ரமணியம் கணேஷ்.
அகம் தியேட்டர், 'தியேட்டர் லாப்' என்ற அதன் இளையர் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் 600க்கும் மேற்பட்ட இளையர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளது.
தமிழ்ச்சுடர் கலை விருதினைப் பெற்ற மற்றோர் அமைப்பான தேசியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரவையும் இயல், இசை, நாடகம் மூலம் தமிழ்மொழியை இளையர்களிடத்தில் வளர்த்து வருகின்றது.
"கொவிட்-19 சூழலில் சவால்களுக்கிடையே எல்லோரின் நம்பிக்கையும் தமிழார்வமும் தமிழ்ப் பேரவையின் நிலைத்தன்மைக்குக் கைகொடுத்துள்ளது. இது தமிழ்ப் பேரவையின் வரலாற்றில் இடம்பெற்ற அனைவருடைய வெற்றி," என்று கூறினார் பேரவையின் தலைவர் 23 வயது விஜயராஜ் முத்துக்குமரன்.
தேசியப் பல்கலைக்கழக சட்டத்துறை மாணவரான விஜயராஜ், எதிர்காலத்தில் சமூகத் தலைவராகப் பணியாற்ற லட்சியம் கொண்டிருக்கிறார்.
புதிய பிரிவாக இவ்வாண்டு தமிழ்ச்சுடர் சிறப்புப் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழ்மொழி விழாவை ஆண்டுதோறும் ஏற்பாடு செய்து வரும் வளர்தமிழ் இயக்கம் இந்தப் பிரிவில் அங்கீகரிக்கப்பட்டது.