சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழக மாணவர்களின் தமிழா அமைப்பு, 'புரோஜெக்ட் எம்பவர்' எனும் திட்டத்தின்கீழ், கடந்த பிப்ரவரி 25ஆம் தேதியிலிருந்து மார்ச் 5ஆம் தேதிவரை பல்கலைக்கழக மாணவர்களுக்கான நான்கு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வருங்காலத்திற்குத் தயாராக இருக்கத் தேவையான திறன்களை அவர்களுக்குக் கற்பிப்பதே இந்நிகழ்ச்சிகளின் நோக்கமாகும்.
நிதிக் கல்வி, தனிமனித அடையாளத்தை மெருகூட்டுதல், 'கே-பாப்' நடனம், கணினி குறியீட்டு முறை ஆகியவற்றை பங்கேற்பாளர்களுக்கு இந்நிகழ்ச்சிகள் கற்றுக்கொடுத்தன. குறிப்பாக, இத்திட்டம் பெண்களுக்கு வெளியுலகத்தில் தேவைப்படக்கூடிய திறன்களை கற்றுக்கொடுத்து அவர்களை ஊக்குவித்தது.
'ஸூம்' செயலிவழி நடைபெற்ற 'புரோஜெக்ட் எம்பவர்' திட்டத்தின் நிகழ்ச்சிகள், 'கோ வித் தி ஃப்ளோ' மகளிர் அமைப்புடன் சேர்ந்து நடத்தப்பட்டது. மாதவிடாய்ப் பொருள்களை வாங்க இயலாத வறுமைநிலை, மாதவிடாய் தொடர்பான நோய்கள் ஆகிய பிரச்சினைகளைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க உழைக்கும் அமைப்பிற்குக் கைகொடுப்பது அதன் நோக்கம்.
"நம் இந்திய சமுதாயத்தில் மாதவிடாய் பற்றிப் பரவலாகப் பேசப்படாததால் பலருக்கும் இதுபற்றிப் போதிய அறிவு இல்லை. இதை மாற்றவே நாங்கள் இந்தத் திட்டத்தை மேற்கொண்டோம்," என்றார் 'எம்பவர்' திட்டத்தை வழி நடத்திய அக் ஷயா நடராஜன்.
நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர்கள் தாங்கள் விரும்பிய தொகையைக் கட்டணமாகச் செலுத்தலாம் என்று கூறப்பட்டது. அந்தத் தொகையை, 'கோ வித் தி ஃபுளோ' அமைப்புக்கு நன்கொடையாக வழங்கியது 'எம்பவர்' திட்டம்.
இந்த நன்கொடை எங்களுக்குப் பெரும் உதவியாக இருந்தது. 'சானிட்டரி நாப்கின்களை' பொட்டலம் கட்டுவதற்கும் அவற்றை குறைந்த வருமானக் குடும்பங்களை சேர்ந்த பெண்களிடம் கொண்டுசேர்ப்பதற்கும் இத்தொகை பயன்பட்டது," என்றார் 'கோ வித் தி ஃபுளோ' அமைப்பைச் சேர்ந்த சுந்தரம் மோகன் ஷக்தி.