கி. ஜனார்த்தனன்
இந்தியப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்திய மரபுடைமை நிலையம் நேற்றும் இன்றும் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.
'இந்திய இசை, இசைக்கருவிகள்' என்ற கருப்பொருளில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொவிட்-19 கிருமிப்பரவலால் கடந்த ஈராண்டுகளாகப் பெரும்பாலும் மெய்நிகர் நிகழ்ச்சிகளை நடத்தி வந்த நிலையம், இவ்வாண்டு நேரடி நிகழ்ச்சிகளை நடத்துகிறது.
நிலையத்துக்குச் செல்வோர் வெவ்வேறு இந்திய சமூகங்களின் மாறுபட்ட இசையைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்வதுடன், இசை, நடன நிகழ்ச்சிகளையும் கண்டு ரசிக்கலாம்.
இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் நான்கு மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெறும். இவற்றில் சில இலவச நிகழ்ச்சிகள். பயிலரங்குகளுக்குக் கட்டணம் $10.00. 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு தஞ்சாவூர் ஓவியப் பயிலரங்கை நடத்துகிறார் 'நிகா ஆர்ஸ்ட்' அமைப்பின் காயத்ரி சோமேஸ்வரன். தெய்வத் திருவுருவங்களுடன் இசைக்கருவிகளைச் சித்திரிக்கும் படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இசையுடன் தொடர்புடைய கதை சொல்லும் அங்கத்தை 'டமாரு' அமைப்புடன் இணைந்து வழங்குகிறார் 'டிங்க்தமிழ்' அகாடமியின் யோகேஸ்வரி பிரஷாந்த்.
பரதநாட்டியம், கதக், ஒடிசி, குச்சுப்புடி, மோகினியாட்டம் ஆகிய நடனங்களைக் கொண்ட சிறப்புக் காணொளி, நிலையத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஒரே இசைக்கு வெவ்வேறு பாணி நடனங்கள் இடம்பெற்றிருப்பது, இந்தியக் கலாசாரத்தின் பன்முகத்தன்மையில் உள்ள ஒற்றுமையைக் காட்டுவதாகக் கூறினார் 'சிங்கப்பூர் இண்டியன் ஆர்க்கெஸ்ட்ரா அன் குவையர்' எனும் இந்திய இசைக்குழுவின் இயக்குநர் லலிதா வைத்தியநாதன்.
சிங்கப்பூரில் பல்வேறு இந்திய சமூகத்தினர் வசிப்பதால் இத்தகைய ஒருங்கிணைப்பு பொருத்தமாக இருப்பதாக நிலையத்தின் தலைவர் பவானி தாஸ் கூறினார்.