பாலர் பள்ளி தமிழாசிரியர்களின் திறன்களை மெருகூட்டவும் அவர்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் தமிழ்மொழி கற்றல், வளர்ச்சிக் குழுவின் ஏற்பாட்டில் நேற்று கருத்தாய்வரங்கம் ஒன்று நடைபெற்றது.
பொங்கோல் கிரீன் வட்டாரத்தில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் பாலர் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், தங்கள் மழலைக் குரல்களில் தோட்டத்தைப் பற்றிய பாடல் ஒன்றை இனிமையாகப் பாடி நிகழ்ச்சியை அழகாகத் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக வருகை தந்த மாடர்ன் மாண்டிசோரி குழுமத்தின் தலைவர் டி.சந்துரு, “நல்ல ஆசிரியர்கள் இல்லையேல் நல்ல மாணவர்கள் இல்லை. ஆகையால், இத்தகைய நிகழ்ச்சிகளின்வழி அவர்களது திறன்களை வளர்ப்பது முக்கியமாகிறது,” என்று கூறினார்.
அவரது சிறப்புரையை அடுத்து கருத்தாய்வரங்கத்தின் இணையப்பக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த இணையப் பக்கத்தில் பாலர் பள்ளி ஆசிரியர்கள் பயன்படுத்தக்கூடிய பற்பல கற்பித்தல் உத்திகளைப் பற்றிய பட்டறைகள் காணொளிகளாகப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியின் சிறப்புப் பேச்சாளரான முனைவர் க.காவேரி, அர்த்தமுள்ள விளையாட்டு, தரமான இருவழி கருத்துப் பரிமாற்றம், பாலர் பள்ளியில் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படும் வெவ்வேறு கூறுகள், அரசாங்கம் பாலர் பள்ளிகளுக்கு வழங்கி வரும் உதவிகள் ஆகிய கருப்பொருள்களை ஒட்டி உரை ஆற்றினார்.
யூஹுவா வட்டாரத்தில் உள்ள பிசிஎஃப் ஸ்பார்க்கல்டாட்ஸ் பாலர் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், கண்ணுக்குக் குளிர்ச்சியான ஒயிலாட்டத்துடன் நிகழ்ச்சியை நிறைவுசெய்தனர்.
தமிழ்மொழி கற்றல், வளர்ச்சி குழுவின் செயலகத் தலைவர் திருவாட்டி மும்தாஸ், இன்றைய காலகட்டத்தில் இல்லங்களில் மாணவர்கள் தமிழ் பேசுவது குறைந்து வருவதால், மாணவர்களுக்கு தமிழ் மொழியின்மீது ஆர்வத்தை ஏற்படுத்துவது பாலர் பள்ளி ஆசிரியர்களுக்குக் கடினமாகியுள்ளதாகச் சொன்னார்.
எனவேதான், இத்தகைய நிகழ்ச்சிகள் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட முனைவதாக திருவாட்டி மும்தாஸ் கூறினார்.
இக்கருத்தாய்வரங்கத்தில் பங்கேற்ற பாலர் பள்ளி ஆசிரியரான திருவாட்டி பொற்செல்வி மாரப்பன், இதுபோன்ற நிகழ்ச்சிகளின்வழி தமிழ்மொழியை எவ்வாறு மாணவர்கள் விரும்பும் வகையில் அவர்களிடம் கொண்டுசேர்க்க இயலும் என்று தாம் கற்றுக்கொண்டதாகச் சொன்னார்.
இந்நிகழ்ச்சியில் பாலர் பள்ளி மாணவர்களின் கற்றலைச் சுவாரசியமாக்கும் வகையில் இரு கதைகள் வெளியிடப்பட்டன.