வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் மகூலம் கலைக்கூடம் வழங்கிய 'சதிராட்டம்' நிகழ்ச்சி இவ்வாண்டின் தமிழ் இளையர் விழாவின் ஓர் அங்கமாக இம்மாதம் 7ஆம் தேதி அரங்கேறியது.
சிங்கப்பூர் நுண்கலைக் கழகத்தின் மகாத்மா காந்தி நினைவக அரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பரத நாட்டியத்தின் தோற்றம் தொடங்கி ஆங்கிலேயர் காலம் வரை பரதக்கலை யில் ஏற்பட்ட மாற்றங்கள் வர்ணிக்கப்பட்டது.
நாட்டியம் மூலம் பழந்தமிழ் இலக்கியத்தையும் பரதக்கலை வரலாற்றையும் இளையர்களிடம் கொண்டு செல்ல நடனமணிகள் முனைந்தனர். நாட்டியத்தை பழந்தமிழ் மக்கள் 'கூத்து' என்று அழைத்ததாகவும் சங்க இலக்கியங்களிலும் அவ்வாறே குறிப்பிடப்பட்டதாகவும் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விளக்கினார்.
கூத்துக் கலையை வாழ்க்கைத்தொழிலாகக் கொண்ட பெண்கள் விறலியர் என்றழைக்கப்பட்டதும் அப்பெயருக்கான காரணமும் விளக்கப்பட்டது. கவிஞர் கண்ணதாசனின் 'மன்னவன் வந்தானடி தோழி' பாடல் வரிகளுக்கு சிவ பிரிவீணா நடனமாடினார்.
இவ்வாறு, விளக்க உரைகளுடன் சிலப்பதிகாரம், சரபேந்திர பூபாலக் குறவஞ்சி போன்ற நூல்களை குறிப்பாகக் கொண்ட நடனங்கள் தொடர்ந்து அரங்கேறின.
இவற்றில், நடன ஆசிரியர்களுடன் 'தர்ஷன் ஃபைன் ஆர்ட்ஸ்', 'ஓம்கார் ஆர்ட்ஸ்' பள்ளிகளின் இளைய நடனமணிகளும் பங்கேற்றனர். பழந்தமிழ் இலக்கிய வரிகளுக்கு நடனம் அமைக்கும் இந்த முயற்சியை நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஓம்கார் ஆர்ட்ஸின் திருமதி ஸ்ரீதேவி சிவராஜசிங்கம் பாராட்டினார். நடனங்களைக் கண்டு
களித்த மாணவர்களும் மக்களும் நிகழ்ச்சியின் இறுதியில், நடன முத்திரைகளையும் அசைவுகளையும் கற்று நடனமணிகளுடன் ஆடி மகிழ்ந்தனர்.
பிற்பகலில் தொடக்கப் பள்ளி மாணவர்களும் மாலையில் பொதுமக்களும் பங்கேற்றனர்.
இன்னும் பல படைப்புகள் மூலம் பழந்தமிழ் இலக்கியத்தையும் பரத வரலாற்றையும் இன்றைய தமிழர்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம் கொண்டு செல்ல எண்ணுவதாக மகூலம் கலைக்கூடத்தின் நடன ஆசிரியர்களான ஆ.மீனலோசனியும் பா.சிவ பிரிவீணாவும் தெரிவித்தனர்.
செய்தி: பொன்மணி உதயகுமார்