மலேசியாவிலிருந்து தனியாக 19 வயது இளையராக சிங்கப்பூருக்கு வந்த திரு மனோகரன் சுப்பையாவின் கல்வித்துறை, தமிழ்த்துறை பயணங்கள் அவர் முற்றிலும் எதிர்பாராதவை.
இவ்வாண்டு தனது 63 வயது நிறைவைக்காணும் திரு மனோகரன், 43 ஆண்டுகள் சேவைக்குப் பிறகு ஆண்டு இறுதியில் கல்வித்துறையில் இருந்து ஓய்வுபெறுவார்.
தற்போது ஆண்டர்சன்-சிராங்கூன் தொடக்கக் கல்லூரியின் முதல்வராக பணிபுரிந்து வரும் அவர், ஓய்வுபெற்ற பின்னர் வளர்தமிழ் இயக்கத்தின் தலை வராக தொடர்ந்து செயலாற்றுவார்.
இவர், 'சிண்டா' எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்துள்ளார்.
பினாங்கில் பிறந்து வளர்ந்த திரு மனோகரன், ஒன்பது பிள்ளை களில் ஆக இளையவர்.
தாய் தந்தையரை இழந்து, பின்னர் மலேசியாவில் 'ஏ' நிலை தேர்வு எழுதிய பிறகு பல வேலைகளுக்கு விண்ணப்பித்திருந்தார். அவரின் கதவுகளை முதலில் தட்டியதோ, சிங்கப்பூரிலிருந்த ஓர் ஆசிரியப்பணி வாய்ப்பே.
முதன்முதலில் தொடக்கப்பள்ளி ஆசிரியராக நியமிக்கப்பட்ட திரு மனோகரன், கற்பித்தலில் தனக்கிருந்த ஆர்வத்தையும் திறனையும் கண்டறிந்தார்.
கடற்படையில் சேர இருந்த அவரை கல்வித்துறையின் பக்கம் விதி இழுத்துச் சென்றது என்றார் அவர். ஆசிரியர் பணியைத் தொடங்கிய அவர், 1999ல் இருந்து பள்ளி முதல்வராக, தொடக்கப்பள்ளி, உயர் நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி என பல கல்விக் கழகங்களில் தலைமைத்துவ அனுபவம் பெற்று உள்ளார்.
மாணவர்களின், பெற்றோர் களின் எதிர்பார்ப்புகளால் அலைக் கழிக்கப்படும் ஆசிரியர்களிடத்தில் நம்பிக்கையை விதைப்பது பள்ளி முதல்வராக, தன் பணியின் முக்கிய அம்சமாக இருந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அங் மோ கியோ உயர்நிலை பள்ளியின் ஆங்கில துறை தலை வராக பணியாற்றியது திரு மனோ கரனின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. 1990லிருந்து 1996 வரை அங்கு பணியாற்றியபோது, பெரும்பாலும் குறைந்த வருமான குடும்பங்களைச் சேர்ந்த மாணவர் களின் ஆங்கிலப் பாடத்துக்கான 'ஓ' நிலை தேர்ச்சியை உயர்த்த முப்பது சக ஆசிரியர்களுடன் அவர் கடுமையாக உழைத்தார்.
ஆறு ஆண்டுகளில், தேர்ச்சி விகிதத்தை 73லிருந்து 98 விழுக் காட்டிற்கும், உயர்தேர்ச்சி விகிதம் எட்டிலிருந்து 31 விழுக்காட்டிற்கும் உயர்த்தினார்.
தனது வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு சாதனையாக இதை கருதுவதாக திரு மனோகரன் கூறினார். ஆசிரியர்கள் மாணவர்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் ஆற்றல் கொண்டுள்ளனர் என்பதை இது புலப்படுத்துவதாக அவர் கூறினார். வகுப்பறை தாண்டிய அனுபவக் கல்வியையும் நற்பண்புகளையும் வலியுறுத்துவதற்காக தெமாசெக் தொடக்கப் பள்ளி முதல்வராக இருந்த திரு மனோகரன் அதற்கென்று சிறப்பு நேரத்தை ஒதுக்கியிருந்தார். இது, 2000ஆம் ஆண்டில் படித்து, தற்போது மலேசியாவில் மருத்துவராக பணிபுரியும் திருமதி நாசுரா படூலியின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
"மதிப்பெண்களைவிட மனிதர் களின் பண்பே வாழ்வை உயர்த்தும் என்ற கருத்தை எனது பிள்ளை யிடத்தில் கட்டாயம் வலியுறுத்து வேன்," என்று திருமதி நாசுரா படூலி கூறியது திரு மனோகரனை நெகிழச் செய்தது.
அங் மோ கியோ உயர்நிலை பள்ளியில் 1989ல் வரலாற்று ஆசிரி யராக திரு மனோகரன் பணிபுரிந்த சமயத்தில், தனது கனவுகளை நனவாக்க அவர் பெரிதும் உறுதுணையாக இருந்ததாகவும் எதிர் காலத்தை வடிவமைக்க அவர் நல்ல வழிகாட்டியாக இருந்ததாகவும் கூறினார் 50 வயது திருவாட்டி மா லோசினி. தற்போது தகவல், தொடர்பு தொழில்நுட்பத் துறை தலைவராக பணியாற்றும் அவர், திரு மனோகரனை ஒரு மறக்க முடியாத ஆசிரியராகக் குறிப்பிட்டார்.
சிறப்புத் தேவையுள்ள மாணவர்கள், குடும்ப சிக்கல்கள் கொண்டோர் ஆகியோரின் கல்வி வாய்ப்பு களில் முன்பிருந்ததைவிட அதிக கவனம் தற்போது இருப்பதை சுட்டிய திரு மனோகரன், குறைந்த வருமான மாணவர்களுக்கு நம் கல்வித்திட்டம் இன்னும் கூடுதலாக உதவலாம் என்பதை முன்வைத்தார்.
மலாயும் ஆங்கிலமுமே பள்ளிப் பருவத்தில் கற்றிருந்த திரு மனோ கரனுக்கு, தந்தை நியமித்திருந்த தமிழ் துணைப்பாட வகுப்பு ஆசிரி யரே தமிழ்மொழியில் எழுதுவதையும் பேசுவதையும் அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர், கல்வித்துறையில் சுமார் முப்பது ஆண்டு களுக்கு ஆங்கிலத்தில் கற்பித்துக்கொண்டிருந்த அவர், எதிர்பாராத வகையில் தமிழ்த் துறையில் நுழைந்த சமயத்தில் தமிழில் பேச தயங்கினார்.
தமிழ்ப் படங்கள், வசனங்கள், பாடல்கள் ஆகியவற்றை அவர் ரசித்ததும், அன்றாடம் செய்தித்தாள்களும் நூல்களும் வாசித்ததும் அவருக்குக் கைகொடுத்தது.
தமிழ் உணவகங்களில் உணவு வாங்குவதிலிருந்து, முடிந்த அளவுக்கு எல்லா இடங்களிலும் தமிழில் பேச முயற்சி செய்தார் அவர்.
ஓய்வுபெற்ற பின்னர், சமூகத்துக்குப் பங்காற்றும் வகையில் தலைமைத்துவ பயிற்றுவிப்பாளராக இலவச சேவைகள் வழங்க திரு மனோகரன் விரும்புகிறார்.