‘முன்னேறும் சிங்கப்பூர்’ திட்டமும் இளம் சாதனை சிங்கப்பூர் அறநிறுவனமும் இணைந்து தொடங்கிய ‘ஜேஏ ஸ்பார்க் தி ட்ரீம்’ எனும் திட்டத்தின் மூலம் இதுவரை ஏறத்தாழ 2,700 தொடக்கப்பள்ளி மாணவர்கள் நிதியறிவு திறன் சார்ந்த பயிற்சிகளைப் பெற்று பலனடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம் தொடக்கப்பள்ளி மாணவர்களின் நிதியறிவுத் திறன், சமூகத் திறன், வாழ்க்கைத் திறன் ஆகியவற்றை நடைமுறை நடவடிக்கைகள் கொண்ட பயிலரங்குகள் வாயிலாக ஒருங்கிணைக்க முற்பட்டு வருகிறது.
இத்திட்டம் மாணவர்களுக்கு அனுபவ கற்றல் மூலம் நிதி மேலாண்மை திறன்களை மேம்படுத்த ஊக்குவிக்கிறது.
தொண்டூழியர்கள் வழிநடத்தும் பயிலரங்குகள், குடும்ப நடவடிக்கைகள் சமூகப் பகிர்வு அங்கங்கள், இணைய வழிக்கற்றல் உட்பட மாணவர்களைக் கவரும் பல்வேறு வழிமுறைகளில் நிதியறிவு பற்றி சொல்லித் தரப்படுகிறது.
பல்வேறு தொடக்கப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், தொண்டூழியர்கள் ஆகியோரை இணைக்கவும் இத்திட்டம் முனைகிறது.
திட்டம் தொடங்கியது முதல் இதுவரை 10,800 மணி நேர செயல்முறை வகுப்புகள் நடைபெற்றுள்ளன. இதில் 120க்கும் மேற்பட்ட ‘முன்னேறும் சிங்கப்பூர்’ தொண்டூழியர்களும் பொதுமக்களும் பங்கேற்றனர்.
இத்திட்டத்தின் ஓர் அங்கமாக இவ்வாண்டு ‘ஜேஏ ஸ்பார்க் தி ட்ரீம் சமூக சவால் 2023’ எனும் மாணவர்களுக்கான போட்டி ஒன்றும் நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் ஒரு சமூகப் பிரச்சினையைக் கண்டறிந்து அதற்கான தீர்வை வழங்க வேண்டும்.
சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட இப்போட்டியின் இறுதிச்சுற்று இவ்வாண்டு நவம்பர் இறுதியில் நடைபெற்றது. ஆசியா முழுவதிலிருந்தும் பல்வேறு மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர்.
“நிதியறிவு திறன்களை ஆரம்ப காலத்திலிருந்தே வளர்ப்பது நிதி ரீதியாக நிலையான வலுவான எதிர்காலத்திற்கு அடித்தளமாக அமையும். இதனாலேயே தொடக்கப்பள்ளி மாணவர்கள் மீது கவனம் செலுத்துகிறோம்.
“இத்திட்டத்தின் மூலம் இவர்கள் பணம் ஈட்ட, செலவழிக்க, சேமிக்க தேவையான அடிப்படை அம்சங்களைக் கற்றுக்கொள்கின்றனர்,” என்றார் முன்னேறும் சிங்கப்பூர் திட்ட தலைமை நிர்வாக அதிகாரி ஏட்ரியன் வின்சென்ட்.
“இணைய விளையாட்டுகள் உள்ளிட்ட பல சுவாரசியமான நடைமுறை நடவடிக்கைகளால் மாணவர்கள் எளிமையாக நிதி மேலாண்மை பற்றி கற்றுக்கொள்ளமுடியும்.
“இத்திட்டத்தின் ஓர் அங்கமாக, மாணவர்கள் சமூகப் பிரச்சினைகளைக் கண்டறிந்து அதற்கான புத்தாக்கத் தீர்வுகளையும் பரிந்துரைக்கின்றனர். இதன்மூலம் அவர்களிடம் சமூகப் பொறுப்புணர்வு ஏற்படுகிறது,” என்றார் ஜேஏ சிங்கப்பூரின் நிர்வாக இயக்குநர் இங் ஹாவ் யீ.