விளையாட்டு மனப்பக்குவம் தந்தது: உருட்டுபந்து விளையாட்டாளர் தனீஷா கோர்

விளையாட்டு மனப்பக்குவம் தந்தது: உருட்டுபந்து விளையாட்டாளர் தனீஷா கோர்

2 mins read
3cfa4bda-3184-408e-a540-89eeb6464a1d
தனீஷா கோர் - படம்: தனீஷா கோர்
multi-img1 of 3
Google News Preferred Icon

விளையாட்டு தன்னை பக்குவமுள்ள இளையராக உருவாக்கியுள்ளது என்கிறார் உருட்டுபந்து விளையாட்டாளர் தனீஷா கோர், 18.

சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளியில் ‘ஐபி’ எனப்படும் ‘இன்டர்நேஷனல் பக்கலோரே’ பட்டயப்படிப்பை மேற்கொண்டு வந்த இவர், புதன்கிழமை (ஜனவரி 3) வெளியான இறுதித்தேர்வின் முடிவுகளில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். 

தன்னுடைய 6வது வயதில் மூத்த சகோதரி விளையாடியதைப் பார்த்து உருட்டுபந்து விளையாடத்  தொடங்கினார் தனீஷா. பொழுதுபோக்காக ஆரம்பித்த பயிற்சியில் விரைவிலேயே அதிக ஆர்வம் ஏற்பட்டது. தொடக்கநிலை மூன்றாம் ஆண்டு படிக்கையில் போட்டிகளில் கலந்துகொள்ளும் அளவிற்கு முன்னேறினார் இவர். 

“சிறு வயதிலிருந்தே பயிற்சியைத் தொடங்கியதால் உருட்டுபந்து என்னுடைய அன்றாடக் கடமைகளில் ஒன்றாகிப் போனது. பயிற்சி நேரத்தில் என்றுமே மனத்தளவில் நான் களைப்பை உணர்ந்ததில்லை,” என்கிறார் தனீஷா. 

இவர் வாரத்தில் குறைந்தது 5 நாள்களாவது தலா இரண்டு மணி நேரத்திற்குக் குறையாமல் மாலையில் உருட்டுபந்து விளையாட்டில் பயிற்சி எடுத்துக்கொள்கிறார். அத்துடன் வாரத்தில் இரு நாள்களுக்கு உடலுறுதிப் பயிற்சியும் மேற்கொள்கிறார். 

கடந்த ஆறு ஆண்டுகளாக ‘பௌலிங் அகாடமி’யில் சிறந்த மாணவ-வீராங்கனையாக வலம்வரும் இவர், சிங்கப்பூர் உருட்டுபந்து சம்மேளன தேசிய வளர்ச்சிக் குழுவிற்குத் தேர்தெடுக்கப்பட்டு பல போட்டிகளில் பங்கேற்றார். 

குறிப்பாக 2022ஆம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற 21வது ஆசிய இளையர் டென்பின் உருட்டுபந்து வெற்றியாளர் போட்டியில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து பெண்கள் நால்வர் அணிப் பிரிவில் தன் குழுவினருடன் கலந்துகொண்டார். இவரது குழு மூன்றாம் இடத்தைப் பிடித்தது. 

‘ஐபி’ பட்டயப் படிப்பின் இரண்டாம் ஆண்டில் தேர்விற்கு முன்னுரிமையளித்து விளையாட்டிற்குச் சில மாத காலம் ஓய்வு கொடுத்தார் தனீஷா. “முழு கவனத்தையும் தேர்வின் மீது செலுத்த அந்த இடைவெளி மிகவும் தேவையாக இருந்தது. அதற்கான பலனாகவே தற்போது வந்துள்ள தேர்வு முடிவுகளைப் பார்க்கிறேன்,” என்றார் இவர். 

நேரத்தை வீணாக்காமல் செயல்படுவதை வழக்கமாகக் கொண்டுள்ள இவருக்கு சமூக சேவையிலும் நாட்டம் உண்டு. சிங்கப்பூரின் ஜாலான் குக்கோ பகுதியில் தொண்டூழியத்திலும் ஈடுபடுகிறார் இவர். 

“பதின்ம வயதில் நாம் கற்றுக்கொள்ளும் வாழ்க்கைப் பாடங்களும் அனுபவங்களும் எதிர்காலத்தில் உலகத்தைத் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் சிறந்த மனிதராக உருவாக்கும் என்று நம்புகிறேன். அதனாலேயே முடிந்த அளவிற்கு பன்முகத் திறன்களை வளர்க்கும் முயற்சிகளை மேற்கொள்கிறேன்,” என்றும் இவர் கூறினார். 

சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளியைச் சேர்ந்த ‘ஐபி’ பட்டயப்படிப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வில் முழுத் தேர்ச்சியடைந்துள்ளனர். இவர்களில் 60 விழுக்காட்டினர் 40 அல்லது அதற்கு மேலான புள்ளிகளைப் பெற்றுள்ளனர். இதற்கான தேர்வு சிங்கப்பூரில் சென்ற ஆண்டு நவம்பரில் நடைபெற்றது.

குறிப்புச் சொற்கள்
விளையாட்டு