கணவரின் துன்புறுத்தலை 15 ஆண்டுகளாகப் பொறுத்துக்கொண்டார் திருவாட்டி கோகிலா மாரிமுத்து, 67.
தொடையில் காயங்கள், தகாத சொற்கள், கத்தியைக் கொண்டு மிரட்டல் எனப் பல தருணங்களில் சிக்கிய அவர், தன் உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என்று பலமுறை எண்ணியதுண்டு.
ஈராண்டுகளாக காதலித்தபோது பிரச்சினை ஏதுமில்லை. கணவர் ‘காக்கேசிய’ இனத்தவர், கோகிலா தமிழர். 1988ல் நடந்த திருமணம் கோகிலாவின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது.
கோகிலாவைத் தன் கட்டுக்குள் கொண்டு வர அவரின் முன்னாள் கணவருக்கு வன்முறைதான் சரி என்று தோன்றியது.
மூன்று பிள்ளைகளுக்குத் தாயானார் கோகிலா.
கணவர் வேலை இழந்ததை அடுத்து, அந்த விரக்தியை கோகிலாவிடம் காட்டினார். ஆனால், கோகிலா இடிந்து போகவில்லை.
அவர் விருந்தோம்பல் துறையில் பணியாற்றி வந்தார். தன் மூத்த சகோதரியின் உதவியுடன் கணவருடன் சமரசம் பேச எண்ணிய கோகிலாவுக்கு ஒவ்வொரு முறையும் ஏமாற்றமே மிஞ்சியது.
தெரிந்தவர் பரிந்துரையில் அவர் ‘பேவ்’ சமூக சேவையை நாடினார். வன்முறையால் பாதிக்கப்படுவோருக்கு இச்சேவை கைகொடுக்கும். அதன் மூலம் அவருக்குத் தனிநபர் பாதுகாப்பு ஆணை கிடைத்தது.
கட்டணம் வசூலிக்காத வழக்கறிஞர் சேவையும் கோகிலாவுக்குக் கிடைத்தது. மனச்சிறையிலிருந்து விடுபட விவாகரத்துதான் திறவுகோலாக அவருக்கு இருந்தது. அவர் மணவிலக்கு பெற முடிவெடுத்தது கோகிலாவின் முன்னாள் கணவருக்கு அதிர்ச்சியளித்தது.
“விவாகரத்தான பிறகு அவர் எனக்குப் பணம் தரவில்லை. மூன்று பிள்ளைகளுடன் நான் ஆண் துணை இன்றி சமாளித்தேன்,” என்றார் கோகிலா.
ஒரு கட்டத்தில் தன் முதல் இரண்டு பிள்ளைகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கப்பூரில் இல்லை. கலக்கத்தில் இருந்த கோகிலா, பிள்ளைகள் கணவருடன் ஐரோப்பாவில் இருப்பதாகத் தன் முன்னாள் மாமியார் மூலம் அறிந்துகொண்டார். அண்மையில் முதல் இரு பிள்ளைகளுடன் இணைந்தார் கோகிலா.
தற்போது தனது இளைய மகனுடன் மூவறை வீவக வீட்டில் கோகிலா வசித்து வருகிறார். அனைத்துலக பள்ளியில் பணியாற்றும் இவர், ‘பேவ்’ அமைப்பில் சேர்ந்து வார இறுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்க விரும்புகிறார்.
கோகிலாவைப் பொறுத்தவரை இந்திய சமூகத்தில் சிலர் விவாகரத்தை இன்னும் ஒரு களங்கமாகவே பார்க்கின்றனர். துன்பம் எவ்வகையில் வந்தாலும் அதற்கு விவாகரத்துதான் சரியான தீர்வு என்றால் தயங்காமல் பெற வேண்டுமென்று கோகிலா கேட்டுக்கொண்டார்.
துன்புறுத்தலுக்கு ஆளாகும்போது தன்னைப்போல் 15 ஆண்டுகள் காத்திருக்காமல் உடனே தீர்வு காண்பது முக்கியம் என்கிறார் இவர்.