கொவிட்-19 விதிமீறல் தொடர்பில் 19 பேரிடம் விசாரணை
உல்லாசக்கூடம் ஒன்றில் ஒன்றாகக் கூடி மதுபானம் அருந்தியபோது கொவிட்-19 நடைமுறை விதிகளை மீறியதன் தொடர்பில் 19 பேரை போலிசார் விசாரித்து வருகின்றனர்.
அவர்கள் 23க்கும் 45க்கும் இடைப்படட வயதினர். ஒன் நார்த் பகுதியில் 1 ஃபியூஷன்போலிஸ் வே என்னும் இடத்தில் உள்ள உல்லாசக்கூடத்தில் 15 ஆடவர்களும் நான்கு பெண்களும் ஒன்றாகக்கூடி இருப்பதாக வெள்ளிக்கிழமை தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக போலிஸ் இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
மேலும் அந்தக் கூடத்தில் பொழுதுபோக்கு நிகழ்ச்சி மற்றும் மதுபானம் போன்றவற்றுக்கு உரிமம் வழங்கப்படவில்லை என்று நம்பப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் அந்தக் கூடத்தை நடத்தியவர் என்று நம்பப்படும் 40 வயது மாதிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சிங்கப்பூரின் மூன்றாம் கட்ட கட்டுப்பாடு தளர்வு அறிவிக்கப்பட்டபோதிலும் மதுபானக்கூடம் மற்றும் பொழுதுபோக்குக்கூடங்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிறியதொரு முன்னோடித் திட்டம் அறிமுகம் கண்டது.
அதன்படி கடுமையான பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளுடன் மூன்று மதுபானக்கூடங்களும் பொழுதுபோக்குக்கூடங்களும் குறுகிய காலத்திற்கு இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.
இத்திட்டம் பிப்ரவரியில் மேலும் இரு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
இவை தவிர இதர கூடங்களுக்கு அனுமதி இல்லை. கொவிட்-19 பாதுகாப்பு இடைவெளி நடைமுறை விதிகளை மீறுவோருக்கு ஆறு மாதம் வரையிலான சிறை, $10,000 வரையிலான அபராதம் போன்ற தண்டனைகள் விதிக்கப்படலாம்.
உரிமமின்றி பொதுபோக்குக் கூடம் நடத்தும், மதுபானம் விநியோகிக்கும் ஒவ்வொரு குற்றத்திற்கும் $20,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.