பாதுகாப்பான இடைவெளி விதிமுறையை வெளிநாட்டு ஊழியர்கள் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய விடுதிகளில் ரோபோ
தங்கும் விடுதிகளில் வெளிநாட்டு ஊழியர்கள் பாதுகாப்பான இடைவெளி விதிமுறைகளைக் கடைப்பிடிப்பிடிப்பதை உறுதி செய்ய விடுதி வளாகங்களுக்குள் தானியங்கி இயந்திர மனிதர்களை (ரோபோ) போலிசார் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.
Matar எனப்படும் அனைத்து நிலப்பகுதிகளிலும் இயங்கக்கூடிய பலபயன் ரோபோக்கள் இரண்டு, தனிமைப்படுத்தப்படுள்ள வளாகங்களுக்குள் ரோந்து பணியில் உள்ளன. இம்மாதத் தொடக்கத்திலிருந்து போலிசாரின் பணிகளுக்கு வலு சேர்க்கும் விதத்தில் இவை செயல்படுகின்றன.
கடந்த மாத மத்தியிலிருந்து அரசாங்க தனிமைப்படுத்தப்படும் வளாகங்களில் இந்த ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டன.
விடுதியில் 15க்கு மேற்பட்ட அதிகாரிகளை வழிநடத்தும் கண்காணிப்பாளர் டியோ வான் லிங், “ஒரே நேரத்தில் அதிகமான பகுதிகளைக் கண்காணிப்பதில் போலிசாருக்கு இவை உதவுகின்றன. அவை தாமாகவே ரோந்துப் பணிகளில் ஈடுபடும் திறன் வாய்ந்தவை,” என்றார்.
360 டிகிரி சுற்றுப்புறத்தைப் படம் பிடிக்கக்கூடிய கேமராக்கள், ஒலிபெருக்கி போன்றவற்றைக் கொண்டிருக்கும் அதனை தூரத்தில் இருந்தே இயக்க முடியும்.
“உணவு வழங்கப்படுவது போன்ற சில இடங்களில் ஊழியர்கள் பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிக்காத நேரங்களில் Matar வாய்மொழியாக நினைவுறுத்தும்,” என்றார் திரு டியோ.
இந்த ரோபோக்கள் சம தளத்தில் மட்டுமே நகரக்கூடியது என்பதால் ஊழியர்களின் அறையில் ஏதாவது நிகழ்ந்தால், அங்கு போலிஸ் அதிகாரிகள் செல்ல வேண்டியிருக்கும்.
சில சமயங்களில் மோசடிகள் பற்றிய எச்சரிக்கைத் தகவல்களையும் பல்வேறு மொழிகளில் Matar ஒலிபரப்பி வருகிறது.
இந்த Matar ரோபோக்களை எஸ்டி எஞ்சினியரிங், ஏ*ஸ்டார் ஆகியவற்றுடன் இணைந்து உள்துறை அறிவியல் மற்று தொழில்நுட்ப முகவை (HTX) ரோபோட்டிக்ஸ், ஆட்டோமேஷன் அண்ட் அன்மேன்ட்சிஸ்டம்ஸ் சென்டர் ஆஃப் என்டர்பிரைசஸ் அமைப்பு தயாரித்துள்ளது.