‘முழுப் பாதுகாப்பு கவசத்துடன் துணை மருத்துவ ஊழியர்கள்; அச்சம் வேண்டாம்’
‘கொவிட் - 19’ எனப்படும் கொரோனா கிருமித்தொற்று இருக்கும் என சந்தேகிக்கப்படும் நோயாளிகளைக் கையாளும்போது மட்டுமின்றி, அனைத்து அவசர மருத்துவத் தேவைகளைக் கையாளும்போதும் அனைத்து துணை மருத்துவ ஊழியர்களும் இனிமேல் முழுப் பாதுகாப்பு கவசத்தை (PPE) அணிந்திருப்பர்.
துணை மருத்துவ ஊழியர்களை முழுப் பாதுகாப்பு கவசத்துடன் பார்த்தால் கலவரமடைய வேண்டாம், அது அவர்களது நடைமுறை என்று உள்துறை விவகாரங்களுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின்பேரில் நேற்று காலை வரை மொத்தம் 219 பேர் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதன் பேச்சாளர் கூறினார்.
கடந்த ஒரு மாத காலத்துக்குட் பட்ட இந்த அழைப்புகளில் பெரும்பாலானவை பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டதாகவும் சில அழைப்புகள் தனியார் மருத்துவர்கள், பலதுறை மருந்தகம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கொரோனா கிருமித் தொற்று இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் ஆம்புலன்சுக்கு அழைப்பு விடுப்பவர்களிடம் அவர்களது நோய் அறிகுறி பற்றி அறிந்த பின்னர் ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்படுகிறது. நோயாளிகளை மருத்துவமனையில் சேர்த்த பிறகு, அந்த வாகனம் முழுமையாகச் சுத்தப்படுத்தப்படுகிறது. இந்த நடவடிக்கை 20 நிமிடங்கள் வரை நீடிக்கிறது. வாகனத்தில் நோயாளியை அழைத்துச் சென்ற ஊழியர்கள் தங்களது பாதுகாப்பு சாதனத்தை முறையாக அப்புறப்படுத்தி விடுகின்றனர்.
இந்தச் சூழ்நிலைக்குத் தயாராக இருந்ததாகவும் இதுவரை குடிமைத் தற்காப்புப் படை நடவடிக்கைகளை சுமுகமாக மேற்கொண்டு வருவதாக வும் திரு அம்ரின் அமின் கூறினார்.