மகாதீர்: 1997 ஆசிய நிதி நெருக்கடியைவிட கொரோனா கிருமித்தொற்று மோசமானது
கொரோனா கிருமித்தொற்று அனைத்துலகப் பொருளியலைக் கடுமையாக பாதிக்கும் என மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது கருத்துரைத்துள்ளார்.
புத்ரஜெயாவில் புளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில், “1997ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆசிய நிதி நெருக்கடியைவிட இது மோசமானது. ஒட்டுமொத்த உலக நாடுகளின் பொருளியலுக்கும் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது,” என்று குறிப்பிட்டார்.
1997ல் ஆசிய நிதி நெருக்கடி ஏற்பட்டபோது, முதல் தவணையில் டாக்டர் மகாதீர் மலேசியப் பிரதமராக இருந்தது நினைவுகூரத்தக்கது.
1997ல் ஏற்பட்ட நிதி நெருக்கடி, ஆசியா முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பல நாடுகளின் பொருளியல் மெதுவடைந்து, நாணயங்கள் வீழ்ச்சியடைந்ததால், மில்லியன் கணக்கான மக்கள் வறுமை கோட்டிற்குக்கீழ் இருந்தனர்.
ஆசிய நிதி நெருக்கடியிலிருந்து விரைவில் மீண்டெழுந்த நாடுகளில் ஒன்று மலேசியா. அந்நாட்டின் பொருளியல் வளர்ச்சி ஒரே ஆண்டில் மீண்டது. அப்போது சரிவுப் பாதையிலிருந்து மலேசியாவை மீட்டெடுப்பதில் டாக்டர் மகாதீர் முக்கிய பங்காற்றியிருந்தார்.
ஆனால், இம்முறை நாணய பரிவர்த்தனை விகித்ததை மாற்றி அமைப்பது அவ்வளவாக பலன் தராது என்று டாக்டர் மகாதீர் கூறினார்.
“மலேசியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் முதலீட்டாளர் நம்பிக்கை மிகவும் குறைந்துள்ளது. ஏனெனில், பங்கு அல்லது வேறு எதிலும் நீங்கள் முதலீடு செய்து பின்னர் அவற்றை உங்களால் விற்க முடியாது என அஞ்சினால், நீங்கள் முதலீடு செய்ய மாட்டீர்கள்,” என்று அவர் சொன்னார்.
உலகின் ஏராளமான நாடுகளுக்கு கொரோனா கிருமி பரவிவிட்டதால், பயணங்கள் செய்வதை மக்கள் குறைத்துவிட்டனர். விமானத்துறை, சுற்றுப்பயணத்துறை உள்ளிட்ட பல துறைகள் படுத்துவிட்ட நிலையில் உணவு, சுகாதாரப் பராமரிப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மீது பயனீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளதை டாக்டர் மகாதீர், 94, சுட்டினார்.