கொவிட்-19: பொது மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சைபெறுவோரின் மருத்துவச் செலவை அரசாங்கம் ஏற்கும்
கொரோனா கிருமித் தொற்றுக்காக சிங்கப்பூர் பொது மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் மருத்துவச் செலவை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்று நேற்று [பிப்ரவரி 12] சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்தார். ஆனால், வெளிநோயாளி சிகிச்சைக்கான செலவு அதில் சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது என்று அவர் தெளிவுபடுத்தினார்.
'கொவிட்-19' எனப்படும் கொரோனா கிருமித் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுவோர் பொது மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், சமூகப் பரவலைத் தடுக்க இது வழிவகுக்கும் என்றார்.
அவ்வாறு பொது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெறுவோரின் செலவை அரசாங்கம் ஏற்கும் என்று குறிப்பிட்ட அவர், பொதுச் சுகாதாரத்தைக் காக்கும்பொருட்டு இத்தகைய நடவடிக்கை தேவை என்றார்.
வெளிநோயாளி சிகிச்சை, தனியார் மருந்தகங்கள், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு பெறப்படும் சிகிச்சைக்கான செலவை அரசாங்கம் ஏற்காது. ஆனால், அவர்கள் மருத்துவக் காப்புறுதித் திட்டங்களை வைத்திருதால் அவை அந்தச் செலவைச் சரிக்கட்டக்கூடும்.
ஆனால், இத்தகைய நோய்ப் பரவல் அவர்களது காப்புறுதித் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளதா என்பதைப் பற்றி சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் முகவர்களைத் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.
#தமிழ்முரசு #கொரோனா #கொவிட்-19 #மருத்துவச்செலவு