இந்தோனீசியா: நிலவரத்தைச் சமாளிக்க மருத்துவமனையான விளையாட்டு வளாகம்
ஜகார்த்தா: இந்தோனீசியாவில் கொரோனா பாதிப்பும் மரணங்களும் கூடுகின்றன. இந்த நிலையில், அந்த நாடு 2018ல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்காக கட்டப்பட்ட விளையாட்டு வீரர்கள் கிராமம் என்ற வளாகத்தை அவசரகால மருத்துவமனையாக மாற்றி இருக்கிறது.
அந்த மருத்துவமனையில் 4,000 பேருக்கும் அதிக கொரோனா நோயாளிகளுக்கு இடமிருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
விளையாட்டு வீரர்கள் கிராமம் தலைநகர் ஜகார்த்தாவில் அமைந்து இருக்கிறது. அதில் 10 கட்டடங்கள் இருக்கின்றன. அவற்றில் நான்கு கட்டடங்கள் மருத்துவமனையாக மாற்றப்பட்டு இருக்கின்றன. அவை 7,000 பேருக்கும் அதிக நோயாளிகளுக்கு இடம் அளிக்க முடியும்.
அங்கு கொரோனா சிறப்புப் படை மருத்துவ ஊழியர்களும் 4,208 கொரோனா நோயாளிகளுக்கும் சிகிச்சை வசதி இருக்கிறது.
கொரோனாவைக் கையாளுவதற்குத் தேவையான வளங்களை அந்த அவசரகால மருத்துவ மனைக்கு அரசாங்கம் வழங்கும் என்று அரசு நிறுவனங்கள் துறை அமைச்சர் எரிக் தோஹிர் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்தோனீசியாவில் சனிக்கிழமையன்று புதிதாக 81 பேரை கொரோனா தொற்றியது. அங்கு மொத்தம் 450 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அந்தக் கிருமி 38 பேரைக் கொன்றுவிட்டது. தென்கிழக்கு ஆசியாவிலேயே கொரோனா மரணம் இந்தோனீ சியாவில்தான் அதிகம்.
கொரோனா காரணமாக ஜகார்த்தாவில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு அவசரநிலை அமலில் இருக்கும் என்று அந்த நகர ஆளுநர் பிரகடனப்படுத்தியுள்ளார்.
கொரோனா நிலவரத்துக்கு ஏற்ப விளையாட்டு கிராமத்தில் இருக்கும் இதர பல கட்டடங்களும் மருத்துவமனைகளாக மாற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அங்குள்ள 10 கட்டடங்களும் மருத்துவமனைகள் ஆனால் 20,000 நோயாளிகளுக்கு இடம் அளிக்க முடியும் என்று பொதுப் பணி மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.
அதிக மக்கள் வாழும் நாடுகளில் நான்காவது இடத்தை வகிக்கும் இந்தோனீசியா கொரோனா சோதனைகளை மந்தமாகத் தொடங்கி இருக்கிறது என்று குறை கூறப்படுகிறது.
இந்தோனீசியாவில் கொரோனா தொற்றியவர்களுக்கும் மரணம் அடைந்தவர்களுக்கும் இடைப்பட்ட விகிதாச்சாரம் 8.7 விழுக்காடாக இருக்கிறது. இது உலகளவில் ஆக அதிகம். இத்தாலியில் கூட இந்த விகிதம் 8.3 விழுக்காடாகத்தான் உள்ளது.
இந்தோனீசிய நிலவரங்களை எல்லாம் வைத்துப் பார்த்தால் கொரோனா பாதிப்பு அங்கு தெரிவிக்கப்படுவதைவிட அதிகமாக இருக்கக்கூடும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள்.