பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா கிருமித்தொற்று
காய்ச்சலும் விடா இருமலும் ஏற்பட்டதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், கொவிட்-19 கிருமி தொடர்பான பரிசோதனையைச் செய்துகொண்டார்.
அவருக்கு கொரோனா கிருமி தொற்றியுள்ளது உறுதியானதை அடுத்து அவர் உடனே தம்மைத் தனிமைப்படுத்திக்கொண்டு வீட்டில் இருந்தவாறே தம் பணிகளைச் செய்கிறார்.
டுவிட்டரில் இன்று (மார்ச் 27) திரு ஜான்சன் பதிவேற்றம் செய்த காணொளியில் இதனைத் தெரிவித்தார்.
“கடந்த 24 மணிநேரத்தில் எனக்கு ஏற்பட்ட மிதமான அறிகுறிகளை அடுத்து கொரோனா கிருமித்தொற்று உள்ளது உறுதியாகிவிட்டது. என்னைத் தனிமைப்படுத்திக்கொண்டாலும் கிருமிக்கு எதிரான நம் அரசாங்கச் செயல்பாடுகளை நான் காணொளி மாநாட்டின்வழி தொடர்ந்து வழிநடத்துவேன்,” என்று அப்பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
பிரிட்டனில் குறைந்தது 11,600 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிருமித்தொற்று பாதிப்பால் கிட்டத்தட்ட 580 பேர் அங்கு உயிரிழந்துவிட்டனர்.
#பிரிட்டன் #கொவிட்-19 #பிரதமர் #போரிஸ் ஜான்சன்