வெயில் காலத்துக்கெல்லாம் அசராத கொரோனா கிருமி; 92 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை தாக்குப்பிடிக்கும்
கொவிட்-19க்கு காரணமான Novel Coronavirus SARS CoV-2 கிருமி பற்றிய அண்மைய ஆய்வில், வேகமாகப் பரவக்கூடிய இந்த கிருமியானது, கிட்டத்தட்ட நீரின் கொதிநிலை அளவுக்கு, அதாவது 92 டிகிரி செல்சியஸ் வெப்பம் வரை வாழும் திறன் படைத்தது என்று தெரியவந்துள்ளது.
பிரான்சில் இருக்கும் Aix-Marseille பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெளியிட்ட இந்த ஆய்வு, கொவிட்-19 தொற்று இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்கும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களின் பாதுகாப்பு, மாதிரிகளின் மீது மேற்கொள்ளப்படும் பரிசோதனை முடிவுகள் பெறப்படுவதற்கு முன்பாகவே அந்த நோயாளிகளின் மீதான கிருமியின் தாக்கம் செயல்படாமல் போவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் போன்றவற்றின் மீது கவனம் செலுத்தியது.
கடந்த சனிக்கிழமை bioRxiv எனும் சஞ்சிகையில் வெளியான இந்த ஆய்வு முடிவில், 60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் ஒரு மணி நேரம் வரை சூடுபடுத்திய பிறகும் கொரோனா கிருமியின் பல்கிப் பெருகும் ஆற்றல் குறைந்துவிடவில்லை என்று தெரிவிக்கிறது.
இது நோவல் கோரானா கிருமியின் தொடர்பில் ஆய்வு மேற்கொண்டுள்ளவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நோயாளிகளிடமிருந்து எடுக்கப்பட்ட பரிசோதனை மாதிரிகளை 15 நிமிடத்துக்கு 92 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைத்து வெப்பப்படுத்திய பிறகே அந்தக் கிருமி அழிந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
“வெய்யில் காலம் வருவதால் கொரோனா கிருமியின் தாக்கம் குறைந்துவிடும்,” என்று பரவலாகப் பரவிவந்த வதந்தியைக்கு இந்த ஆய்வு முடிவு கட்டியுள்ளது. 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைக்கூட நம்மால் தாங்க முடியாத நிலையில், 92 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வாழும் கொரோனாவின் தீவிரமும், திறனும் அச்சுறுத்துபவையாக இருப்பது கண்கூடு.