சமூகத்தில் 24 பேர் உட்பட சிங்கப்பூரில் புதிதாக 52 பேருக்கு கிருமித்தொற்று
சமூக அளவில் 24 பேர் உட்பட சிங்கப்பூரில் இன்று (மே 14) நண்பகல் நிலவரப்படி புதிதாக 52 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமூகத்தொற்று உறுதியானவர்களில் நால்வருக்கு முந்தைய கிருமித்தொற்றுச் சம்பவங்களுடன் தொடர்பில்லை.
மற்ற 13 பேர் சாங்கி விமான நிலைய கிருமித்தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையவர்கள். சிங்கப்பூரில் தற்போதை ஆகப்பெரிய கிருமித்தொற்றுக் குழுமமாக உருவெடுத்துள்ள சாங்கி விமான நிலைய குழுத்தில் இதுவரை மொத்தம் 59 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது.
சமூகத்தொற்று உறுதியான எஞ்சிய எழுவர் முந்தைய கிருமித்தொற்றுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள்.
சமூகத்தொற்று உறுதியான அந்த 24 பேரில் 16 பேர் ஏற்கெனவே தனிமை உத்தரவின்கீழ் வைக்கப்பட்டுவிட்டனர்.
இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த 28 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவர்களில் 19 பேர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்.
வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் புதிதாக எவருக்கும் தொற்று உறுதியாகவில்லை.