ஜப்பானிய ஆய்வு: ஓமிக்ரான் 4.2 மடங்கு அதிகம் பரவக்கூடியது
ஓமிக்ரான் வகை கொரோனா கிருமி, அதன் ஆரம்பக் கட்டத்தில் டெல்டா வகைக் கிருமியைவிட 4.2 மடங்கு அதிகமாகப் பரவக்கூடியது என்று ஐப்பானிய ஆய்வு ஒன்று கூறியுள்ளது.
ஜப்பானின் சுகாதார அமைச்சுக்கு ஆலோசனை வழங்கிவரும் பேராசிரியர் ஹிரோஷி நிஷியுரா அந்த ஆய்வை நடத்தினார்.
மற்ற வகை கொரானா கிருமிகளைவிட ஓமிக்ரான் 3 மடங்கு அதிகமாகப் பரவக்கூடியது என்று இதுவரையிலான ஆய்வுகள் கூறியுள்ள நிலையில் அது நான்கு மடங்குக்கு மேல் அதிகம் பரவும் ஆற்றல் பெற்றது என்று புதிய ஆய்வு கூறியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் தொற்றியவர்களின் தரவுகளை டாக்டர் ஹிரோஷி ஆராய்ந்தார்.
ஓமிக்ரான் வகைக் கிருமி மற்ற வகைகளைவிட அதிகம் பரவக்கூடியது என்றும் அது இயற்கையாகவும் தடுப்பூசிகளின்வழி பெறும் தடுப்பாற்றலுக்கு எளிதில் கட்டுப்படாதது என்றும் டாக்டர் ஹிரோஷி கூறினார்.
டெல்டா வகைக் கிருமியைவிட ஓமிக்ரான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் நிலவுகிறது.
இந்நிலையில் ஓமிக்ரான் பரவலைச் சமாளிக்க அரசாங்கங்கள் இப்போதே செயல்படும்படி என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
ஓமிக்ரான் வகைக் கிருமிப் பரவல் கொவிட்-19 பெருந்தொற்றின் போக்கையே மாற்றிவிடக் கூடும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் கூறினார்.
மேலும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயரக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.