மூன்றில் ஒரு பங்கு சிறுவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிந்துள்ளனர்
தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான அழைப்பைப் பெற்ற சிறுவர்களில் மூன்றில் ஒரு பங்கினர், தடுப்பூசி போட்டுக்கொள்வதற்குப் பதிந்துகொண்டுள்ளனர்.
அத்துடன், இந்த டிசம்பர் மாதத்தில் சிறுவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான எல்லா இடங்களும் நிரப்பப்பட்டுள்ளன.
கல்வி அமைச்சு வியாழக்கிழமை (டிசம்பர் 23) அன்று இதைத் தெரிவித்தது.
அரசாங்கப் பள்ளிகளிலும் மதராசா பள்ளிகளிலும் அடுத்த ஆண்டில் தொடக்கநிலை 4 முதல் 6ல் பயிலவுள்ள சிறுவர்கள், தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.
தடுப்பூசிக்கான பதிவு புதன்கிழமை (டிசம்பர் 22) அன்று தொடங்கியது.
தங்கள் பிள்ளைகளுக்கு தடுப்பூசி போட பதிந்துகொள்ளும்படி, சுமார் 110,000 குறுஞ்செய்திகள் பெற்றோருக்கு அனுப்பப்பட்டன.
இந்நிலையில், வரும் ஜனவரி மாதத்தில், வார இறுதிகளின்போது தடுப்பூசிக்காக பல சிறுவர்கள் பதிந்துகொண்டுள்ளதாக கல்வி அமைச்சர் சான் சுன் சிங் வியாழக்கிழமை இரவு தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறினார்.
பிள்ளைகளுக்கு வாரநாள்களில் தடுப்பூசி போட பதிந்துகொள்வது பற்றி பெற்றோர் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பள்ளிநேரத்தின்போது தடுப்பூசி போட்டுக்கொண்டு, பின்னர் உடல்நலக் குறைவு ஏற்படும் பிள்ளைகளுக்கு மருத்துவ விடுப்பு அளிக்கப்படும் என்று திரு சான் கூறினார்.