சளிக் காய்ச்சலும் கொரோனாவும் சேர்ந்த ஃபுளோரோனா; இஸ்ரேலில் முதல் தொற்று
கொரோனா கிருமி உலகத்தை இரண்டு ஆண்டுகளாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.
இப்போது முதல் ஃபுளோரோனா (Florona) தொற்றுச் சம்பவத்தை இஸ்ரேல் பதிவு செய்திருக்கிறது.
கொரோனாவும் இன்ஃபுளுவென்ஸா (Influenza) எனும் சளிக்காய்ச்சலும் ஒரே நேரத்தில் தொற்றும்போது ஃபுளோரோனா ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இஸ்ரேலின் ரபின் மருத்துவமனையில் பிள்ளைப்பேறுக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு, ஃபுளோரோனா இருந்ததாக அந்நாட்டு செய்தித்தாள்கள் கூறின.
அந்தப் பெண்ணுக்குத் தடுப்பூசி போடப்படவில்லை என்றும் செய்தித்தாள்கள் குறிப்பிட்டன.
வேகமாகப் பரவிவரும் ஓமிக்ரானுக்கு எதிராக உலகநாடுகள் போராடி வரும் நேரத்தில் இச்செய்தி வெளிவந்துள்ளது.
இருப்பினும் ஃபுளோரோனா என்பது புதிய கிருமி வகை இல்லை என்று மருத்துவர்கள் கூறினர்.
இஸ்ரேலில் அண்மை வாரங்களில் சளிக்காய்ச்சல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், ஃபுளோரோனா தொற்று பற்றி ஆராய்ந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஃபுளோரோனா தொற்று, ஒருவரது உடலின் தடுப்பாற்றல் மிகப் பெரும் அளவில் சீர்கெட்டிருப்பதைக் காட்டக்கூடும் என்று கைரோ பல்கலைக்கழக மருத்துவமனையின் டாக்டர் நஹலா அப்துல் வஹாப் இஸ்ரேலிய ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இரண்டு கிருமிகள் ஒரே நேரத்தில் மனித உடலுக்குள் செல்வதை அவர் சுட்டினார்.
குறைந்த தடுப்பாற்றல் உள்ளவர்களுக்கு நான்காவது தடுப்பூசியைப் போடும் நடவடிக்கையை இஸ்ரேல் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 31) அன்று தொடங்கியது.
இந்நிலையில், டெல்மிக்ரோன் எனும் கிருமி வகையும் பரவிக்கொண்டிருக்கலாம் என்று சில நிபுணர்கள் கூறியுள்ளனர்.
கொரோனா கிருமியின் டெல்டா, ஓமிக்ரான் வகைகளின் கலவைதான் டெல்மிக்ரோன் என்று சிலர் நம்புகின்றனர்.
இதற்கான சாத்தியம் இருப்பதாக மொடர்னா நிறுவனத்தின் தலைமை மருத்துவ அதிகாரி போல் பர்ட்டன் கூறினார்.
இரண்டு கிருமி வகைகளின் அணுக்களில் பரிமாற்றம் ஏற்பட்டால், இன்னும் ஆபத்தான கிருமி வகை உருவாகலாம் என்று அவர் குறிப்பிட்டதாக பிரிட்டனின் டெய்லி மெயில் செய்தித்தாள் கூறியது.
ஆனால் டெல்மிக்ரோனை உறுதி செய்யும் தகவல்கள் கிடைக்கவில்லை.