இரண்டாவது நாளாக அமிர்தசரசில் வந்திறங்கிய 100க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு கொரோனா
இரண்டாவது நாளாக, இத்தாலியிலிருந்து அமிர்தசரஸ் அனைத்துலக விமான நிலையத்தில் வந்திறங்கிய 100க்கும் அதிகமான பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இத்தாலியிலிருந்து வந்திறங்கிய விமானத்தில் இருந்த 290 பேரில் 150 பேருக்கு தொற்று இருந்ததாக இந்தியா டுடே இணையத்தளம் கூறியது.
நேற்று அந்நாட்டிலிருந்து அமிர்தசரஸ் நகரில் வந்திறங்கிய 125 பேருக்குக் கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டது.
அவர்களில் குறைந்தது 13 பேர் தனிமைக் காப்பிலிருந்து தப்பித்துள்ளதாக பஞ்சாப் அதிகாரிகள் பிபிசியின் பஞ்சாபி மொழிச் சேவையிடம் தெரிவித்தனர்.
வாடகைக்கு எடுக்கப்பட்ட அந்த விமானம், இத்தாலியின் ரோம் நகரிலிருந்து அமிர்தசரஸ் நகருக்கு வியாழக்கிழமை (ஜனவரி 6) அன்று வந்து சேர்ந்தது.
அதில் 179 பேர் பயணம் செய்திருந்தனர்.
கிருமித் தொற்றுப் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், அமிர்தசரசில் உள்ள குரு நானக் தேவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் விமான நிலையத்திலேயே 9 பேர் ஓட்டம் பிடித்ததாகவும் மேலும் 4 பேர் மருத்துவமனையிலிருந்து தப்பிச் சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமான நிலையத்தில் எப்படி 9 பயணிகள் தப்பினர் என்று தெரியவில்லை.
ஆனால் மற்ற 4 பேர் மருத்துவமனை அதிகாரிகளை ஏமாற்றித் தப்பியோடிதாகக் கூறப்பட்டது.
அவர்கள் அனைவரும் மீதும் வழக்குகளைப் பதிவு செய்யப்போவதாக அதிகாரிகள் கூறினர்.
அத்துடன் தப்பி ஓடியவர்களின் கடவுச்சீட்டுகளை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.