சண்டிகர்: போலி விசா மூலமாக கனடா சென்ற 700க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் தாய்நாட்டிற்குத் திரும்ப அனுப்பப்படும் சிக்கலை எதிர்நோக்குகின்றனர்.
இந்நிலையில், அவர்களுக்குப் போலி விசா ஆவணங்களை வழங்கிய பிரிஜேஷ் மிஸ்ரா என்ற குடிநுழைவு ஆலோசகரின் அலுவலகம் செயல்பட்ட இடத்தை அடையாளம் கண்டுவிட்டதாக பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் மாநகரக் காவல்துறை தெரிவித்துள்ளது.
அவ்வலுவலகம் கடந்த ஏழு மாதங்களாக மூடப்பட்டுள்ளதாகக் காவல்துறை கூறியது. அந்நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்றும் சொல்லப்பட்டது.
அத்துடன், ‘எடுகேஷன் அண்ட் மைக்ரேஷன் சர்விசஸ்’ என்ற பெயரில் மிஸ்ராவுடன் இணைந்து நிறுவனம் நடத்திய ராகுல் பார்கவா என்பவருக்குக் காரணம் கேட்கும் குறிப்பாணை (show-cause notice) அனுப்பப்பட்டுள்ளது என்றும் காவல்துறை தெரிவித்தது.
கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து அம்மாணவர்கள் கல்வி விசா மூலம் கனடா சென்றதாகக் கூறப்பட்டது.
அண்மையில் அவர்கள் கனடா நிரந்தரவாசத் தகுதி கோரி விண்ணப்பித்ததை அடுத்தே, மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.
அவர்களின் ஆவணங்களைச் சோதித்தபோது, கனடியக் கல்வி நிலையங்களில் சேர்வதற்காக வழங்கப்பட்ட ‘மாணவர் சேர்க்கைக் கடிதங்கள்’ போலியானவை எனக் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, கனடிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு அம்மாணவர்களை நாடுகடத்துவதற்கான கடிதங்களை அவர்களிடம் வழங்கியுள்ளது.
கனடா செல்வதற்காக அம்மாணவர்கள் ஒவ்வொருவரும் ரூ.16 லட்சத்திற்கும் மேல் தந்ததாக இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிட்டன.
இதன் தொடர்பில் இதுவரை தங்களுக்கு எந்தப் புகாரும் என்று ஜலந்தர் காவல்துறை துணை ஆணையர் வத்சலா குப்தா கூறினார்.
ஆயினும், புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் சொன்னார்.
இதனிடையே, இவ்விவகாரம் குறித்து தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள கனடிய எம்.பி. கென் ஹார்டி, “இப்படியோர் இக்கட்டான நிலையில் அம்மாணவர்கள் சிக்கியுள்ளனர்,” என்று கூறியுள்ளார்.
நாடு கடத்தப்படக்கூடிய மாணவர்கள் குறித்து விவரம் தெரிந்திருந்தால் அதுபற்றித் தமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும்படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.