அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடந்த 95வது ஆஸ்கார் விருது விழாவில் சிறந்த ஆவணக் குறும்படத்திற்கான விருதைத் தட்டிச் சென்றது தமிழில் எடுக்கப்பட்ட ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’.
அப்படத்தில் நடித்த குட்டி யானை இப்போது தமிழ்நாட்டின் முதுமலை தெப்பக்காடு யானை முகாமில் உள்ளது.
ஆஸ்கார் விருது வென்றதை அடுத்து, முதுமலை முகாமில் அக்குட்டி யானையைப் பார்க்க சுற்றுப்பயணிகள் பலரும் ஆர்வம் காட்டுவதாக ‘ஏஎன்ஐ’ செய்தி தெரிவிக்கிறது.
“அந்த யானை எனக்குப் பிடித்தமான விலங்கு. இந்நிலையில், அது நடித்துள்ள படம் ஆஸ்கார் விருது வென்றிருப்பது எனக்குப் பெருமகிழ்ச்சியும் உற்சாகமும் அளிக்கிறது,” என்றார் அம்முகாமிற்கு வந்திருந்த சுற்றுப்பயணி ஒருவர்.
முதுமலைப் புலிகள் காப்பகத்தில் ஆதரவற்ற இரண்டு குட்டி யானைகளைத் தத்தெடுத்து வளர்க்கும் ஒரு குடும்பத்தைப் பற்றிய படம்தான் ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’.
படத்தின் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வசும் தயாரிப்பாளர் குனீத் மோங்காவும் ஆஸ்கார் விழா மேடையில் தோன்றி விருதைப் பெற்றுக்கொண்டனர்.