நூலாசிரியர் : முனைவர் மா. தமிழ்செல்வி,
முனைவர் கா. அப்துல் ஜாபர் அலி
சென்னை : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் [பி] லிட்., 2014. குறியீட்டு எண்: Tamil 398.994811 TAM
அனைத்து உரிமைகளும் காப்புரிமைக்கு உட்பட்டவை.
தமிழ் மொழியின் வாய்மொழி இலக்கியமாகக் கருதப்பட்டு அன்றாட வாழ்வில் பன்நெடுங்காலந்தொட்டே பயன்படுத்தப்பட்டு வரும் பழமொழிகளில் விலங்கினங்களை மேற்கோள் காட்டி கூறப்படும் தமிழ்ப் பழமொழிகளை ஆராயும் நோக்குடன் “உயிரினப் பழமொழியில் அறிவியல் உண்மை” எனும் தலைப்புடன் இந்நூலினை முனைவர் மா. தமிழ்செல்வி, முனைவர் கா. அப்துல் ஜாபர் அலி ஆகிய இருவரும் இணைந்து எழுதியிருக்கின்றார்கள்.
தமிழ்ப் பழமொழிகளில் கூறப்பட்டுள்ள அறிவியல் உண்மைகளை மிகவும் எளிய முறையில் வாசகர்கள் புரிந்துகொள்ளும் வகையில் அனைத்து பழமொழிகளும் விளக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு “ஆட்டு உரம் ஓராண்டு நிற்கும் மாட்டு உரம் ஆறாண்டு நிற்கும்” எனும் பழமொழியில் விவசாயத்தில் பயன்படுத்தப்படும் உரத்தின் தன்மையும் விலங்கினங்களின் அறிவியல் சார்ந்த விளக்கங்களும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
மற்றொரு பழமொழியில் “யானை வயிறு நிறைந்தாலும் ஆடு வயிறு நிறையாது” என்று வீட்டு விலங்கான அசைபோடும் ஆட்டின் வயிற்றினை, அசைபோடா காட்டு விலங்கான யானையின் பெரிய வயிற்றுடன் ஒப்பிடும் பழமொழி கூறும் உண்மைகளை ஆராய்ந்து விளக்கியிருக்கிறார்கள். இப்பழமொழியை மனித வாழ்வுடன் ஒப்பிடுகையில் ஒருவருக்குக் கிடைக்கும் கல்விச் செல்வமானது ஆட்டின் வயிற்றினைப் போன்றும், பொருட்செல்வமானது யானை வயிற்றினைப் போன்றும் இருத்தல் வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் இதுபோன்று உயிரினங்கள் குறித்த பல பழமொழிகளின் விளக்கங்களை இந்நூலின் வாயிலாக வாசித்தறியும்போது நம் முன்னோர்களின் அறிவுக்கூர்மையை அறிய முடிகிறது.
இந்த நூல் கிடைக்கும் நூலகங்களின் விவரங்களைப் பெற: http://catalogue.nlb.gov.sg